Published : 05 Apr 2019 10:38 AM
Last Updated : 05 Apr 2019 10:38 AM

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி பெறும்; திருவனந்தபுரத்தில் பாஜகவுக்கு வாய்ப்பு: கருத்து கணிப்பில் தகவல்

மக்களவைத் தேர்தலில் கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெறும் என கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆளும் இடதுசாரிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் எனவும், திருவனந்தபுரம் தொகுதியில் முதன்முறையாக பாஜக வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கன்றன.  

இடதுசாரிக் கட்சிகளும், காங்கிரஸும்  நேரடியாக மோதும் கேரளாவில் இரு அணிகளுக்கும் வலிமையான வாக்கு வங்கி உண்டு. காங்கிரஸ் தலைமையிலான அணியில் முஸ்லிம் லீக், கேரளா காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான அணியில் இந்திய கம்யூனிஸ்ட், மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றள்ளன.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரத் தர்ம ஜனசேனா உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இம்மாநிலத்தில் ஏப்ரல் 23-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் கேரளாவில் மக்களவைத் தேர்தலில் மக்களின் கருத்துக்களை அறியும் வகையில் மலையாள மனோரமா பத்திரிக்கை, கார்வி நிறுவத்துடன் இணைந்து தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பை நடத்தியுள்ளது. இந்த கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதில் காங்கிரஸ் தலைமையிலான அணி, கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் 13 இடங்களை கைபற்றும் எனத் தெரிய வந்துள்ளது. மேலும் 3 தொகுதிகளில் கடும் போட்டி நிலவும் என்றும் அதில் 2 இடங்களை காங்கிரஸ் அணி பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மாநிலத்தில் ஆளும் இடதுசாரிக் கூட்டணி 4 இடங்களில் மட்டுமே வெல்லும் என கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அம்மாநிலத்தில் இடதுசாரிகள் வலிமையாக உள்ள வடகரா, ஆலத்தூர் போன்ற தொகுதிகளில் கூட இடதுசாரிகள் சரிவை சந்திக் கூடும் எனத் தெரிகிறது. வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடும் அறிவிப்பு வெளியிடப்படும் முன்பாக இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

பாஜகவை பொறுத்தவரை இந்த முறை திருவனந்தபுரம் தொகுதியில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. அதேசமயம் சபரிமலை போராட்டத்தால் பத்தனம் திட்டா, திருச்சூர் போன்ற தொகுதிகளில் பெருமளவு தங்களுக்கு வாக்குகள் கிடைக்கும் பாஜக தரப்பு கூறி வரும் நிலையில், அதற்கான வாய்ப்பு இல்லை என தெரிகிறது.

 திருச்சூர், பத்தினம் திட்டா தொகுதிகளிலும் பாஜக 2வது இடத்தைக் கூட பிடிக்க முடியாது என கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் பாஜகவின் வாக்கு வங்கியும் அதிகரிக்க வாய்ப்பில்லை எனவும் தெரியவந்துள்ளது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x