Last Updated : 02 Apr, 2019 04:22 PM

 

Published : 02 Apr 2019 04:22 PM
Last Updated : 02 Apr 2019 04:22 PM

மக்களவைத் தேர்தல்: வெறுப்பரசியலுக்கு விடை கொடுப்போம் - 200 இந்திய எழுத்தாளர்கள் வேண்டுகோள்

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில், இந்திய குடிமக்கள், ''பன்மைத்துவம் மற்றும் சமத்துவ இந்தியாவு''க்கு ஆதரவாக தங்கள் வாக்குகளை அளித்து வெறுப்பரசியலை அகற்ற வேண்டும் என நாடு முழுவதும் இருந்து 200 க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இண்டியன் கல்சுரல் ஃபாரம் வெளியிட்டுள்ள ஒரு திறந்த கடிதத்தில் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ள கிரிஷ் கர்னாட், அருந்ததி ராய், அமிதவ் கோஷ், நயான்தாரா ஷாகல் மற்றும் ரொமீலா தாப்பர் உள்ளிட்ட எழுத்தாளர்கள் வெறுப்பு அரசியலைப் பயன்படுத்தி நாட்டை பிளவுபடுத்துவதுவதோடு, நாட்டில் படைப்பு சார்ந்த அச்சத்தை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் இன்று வெளியிட்டுள்ள திறந்த கடிதம் போன்ற அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நாட்டில் முழுமைபெற்ற எண்ணற்ற குடிமக்களையும் வெளியேற்றும் நடவடிக்கையும் இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எழுத்தாளர்கள், கலைஞர்கள், திரைப்பட படைப்பாளிகள், இசைக்கலைஞர்கள் மற்றும் இதர கலாச்சார ஆர்வலர்கள் பலரும் காயம்பட்டுள்ளனர், மிரட்டப்பட்டனர், மேலும் தணிக்கைக்குள்ளாயினர்.

அதிகாரத்தின் மீது கேள்வி எழுப்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தொந்தரவு செய்தல் கைதுசெய்தல், மற்றும் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வழக்கு பதிவு செய்யப்படுகின்றன.

இவை அனைத்தும் மாற வேண்டும். வெறுப்பரசியலைக்கு எதிரான வாக்குகளை அளித்து இதற்கான முதல் நடவடிக்கையை நாம் முன்னெடுக்க வேண்டும்.  ஒரு பன்மைத்துவ சமமான இந்தியாவை படைக்க அனைத்துக் குடிமக்களும் வாக்களிக்க வேண்டுமென நாங்கள் அனைவரும் கேட்டுக்கொள்கிறோம்.

நாடு தற்போது ஒரு குறுக்குவழிச் சாலையில் வந்து நின்றிருக்கிறது. அதை மாற்றி வரவிருக்கும் தேர்தலுக்குப் பின்னர், அரசியலமைப்பின் வாக்குறுதிகளை மீண்டும்  புதுப்பிப்பிக்கத்தக்க ஒரு தேசத்தை அனைத்து இந்திய மக்களும் உருவாக்க வேண்டும்.

உண்பதில் சுதந்திரம், அவரவர் விருப்பமான கடவுளை வணங்கவும் வாழவும், கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடவும்  அனைத்து குடிமக்களுக்கும் சமமான உரிமைகளை, மாறுபட்ட கருத்துக்களை பேசும் உரிமையும் அரசியலமைப்புச் சட்டம் உறுதி அளிக்கிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சமுதாயம், சமூகப் பிரிவு, பாலினம், பிராந்தியம் ஆகியவற்றின் காரணமாக குடிமக்கள் தாக்கப்படுவதையும் அநியாயமாகக் கொல்லப்படுவதையும் பாரபட்சமாக நடத்தப்படுவதையும் பார்க்கிறோம்.

பகுத்தறிவாளர்களை அவர்கள் விரும்புவதில்லை. எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்களாக இருந்தால் அவர்கள் தாக்கப்படுவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள். 

பெண்கள், தலித்துகள், பழங்குடிகள் மற்றும் சிறுபான்மைச் சமூகங்கள் ஆகியோரின் செயல்கள், பேச்சுக்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகியுள்ளன. இதற்கு எதிரான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

வேலைவாய்ப்புகளை பெருக்க வேண்டும், கல்வி, ஆய்வுப் பணிகள், சுகாதாரம், அனைவருக்கும் சம வாய்ப்புகள் எல்லாவற்றிற்கும் மேலாக நமது பன்முகத்தன்மையை பாதுகாக்க வேண்டும். ஜனநாயகம் தழைக்கட்டும்.

இவ்வாறு எழுத்தாளர்கள், திரைப்பட படைப்பாளிகள், இதர கலைஞர்கள் உள்ளிட்டவர்கள் வெளியிட்டுள்ள கடித அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியிலும், ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுள்ள இக்கடிதம் குஜராத்தி, உருது, பங்களா, மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம், ஆனந்த் பட்வர்த்தன், சனல் குமார் சசிதரன் மற்றும் தேவாஷிஷ் மகிஷா உள்ளிட்ட 103 இந்திய திரைப்பட இயக்குநர்கள் ஒன்றாகத் திரண்டு  ''பாசிசத்தை தோற்கடிப்போம் '' என்று வேண்டுகோள் விடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x