Published : 28 Mar 2019 12:22 PM
Last Updated : 28 Mar 2019 12:22 PM
புல்வாமா தாக்குதல் தொடர்பாக, இந்திய அளித்த ஆதாரங்களில் 22 இடங்களிலும் எந்தவிதமான தீவிரவாத முகாம்களும் இல்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 14-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் படையினர் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை, சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது மோதச் செய்து வெடிக்கச் செய்தத்தில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, கடந்த 26-ம் தேதி பாகிஸ்தான் பகுதியில் உள்ள பாலகோட் பகுதியில் செயல்பட்டுவரும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை குண்டுவீசி அழித்தது. இதில் 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.
இதற்கிடையே பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் தீவிரவாத முகாம்கள் செயல்பட்டு வருவதற்கான ஆதாரங்களையும், புல்வாமா தாக்குதல் குறித்த ஆதாரங்களையும் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் மத்திய அரசு சார்பில் கடந்த 27-ம் தேதி அளிக்கப்பட்டது.
புல்வாமா தாக்குதல் தொடர்பாக கடந்த ஒருமாதமாக பல்வேறு விசாரணைகளை நடத்திய பாகிஸ்தான் அரசு, தாக்குதல் தொடர்பாக 54 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், அது குறித்த அறிக்கையை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை இன்று வெளியிட்டுள்ளது.
அதில் " இந்தியா அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் நாங்கள் நடத்திய விசாரணையில், 54 பேரை விசாரணை அடிப்படையில் கைது செய்தோம். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்களுக்கும் தீவிரவாத தாக்குதலுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை எனத் தெரியவந்தது.
மேலும், இந்திய அரசு அளித்த ஆதாரங்களில் 22 இடங்களில் தீவிரவாத முகாம்கள் இருப்பதாகக் கூறி இருந்தது. அந்த இடங்களை ஆய்வு செய்தபோது, அவ்வாறு எந்த தீவிரவாத முகாம்களும் செயல்படவில்லை. அங்கு காணப்படவும் இல்லை.
இந்திய அரசு குறிப்பிட்ட இடங்களுக்கு வந்து ஆய்வு செய்யவும், பார்வையிடவும் நாங்கள் இந்திய அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், " இந்திய அரசு எங்களிடம் அளித்த ஆதாரங்களில், கூறப்படும் இடங்களில் எந்தவிதமான தீவிரவாத முகாம்களும் செயல்படுவதாக தெரியவில்லை. இன்னும் கூடுதலான நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருந்தால், விசாரணை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும். இந்திய அரசு அளித்த அனைத்து ஆதாரங்களையும் நாங்கள் முழுமையாக ஆய்வு செய்துவிட்டோம். இனி புதியஆதாரங்கள் தேவை" எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT