Published : 28 Mar 2019 11:43 AM
Last Updated : 28 Mar 2019 11:43 AM
ராகுல் காந்தி சின்ன குழந்தை, அவர் பேசுவதற்கெல்லாம் நான் பதில் சொல்வதா என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ், பாஜக ஆகிய 4 கட்சிகளும் தனித்தனியாக போட்யிடுகின்றனர். மாநிலத்தில் உள்ள 42 தொகுதிளிலும் 4 கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், கடந்த வாரம் மால்டா நகரில் காங்கிரஸ்கட்சியின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், " பிரதமர் மோடியும், முதல்வர் மம்தா பானர்ஜியும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மம்தா பானர்ஜி மாநிலத்தை முன்னேற்றாமல், வளர்ச்சிப்பாதைக்கு செல்லவிடாமல் வைத்துள்ளார் " என்று குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு குறித்து முதல்வர் மம்தா பானர்ஜியிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மம்தா பானர்ஜி பதில் அளிக்கையில், " ராகுல் காந்தி சின்ன குழந்தை. ராகுல் மனதில் என்ன நினைக்கிறாரோ அதைப் பேசுகிறார். இதற்கு மேல் எந்த கருத்தையும் நான் கூறமாட்டேன். இதைத் தவிர வேறு என்ன சொல்லச் சொல்கிறீர்கள் " எனத் தெரிவித்தார்.
ராகுல் காந்தி அறிவித்த ஏழைகளுக்கான குறைந்தபட்ச வருமானத் திட்டம் குறித்து நிருபர்கள் கேட்டபோது, மம்தா பானர்ஜி கூறுகையில், " காங்கிரஸ் கட்சி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதில் நான் கருத்து தெரிவிப்பது சரியான அணுகு முறையல்ல " எனத் தெரிவித்தார்.
மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தனித்தனியாகப் போட்டியிட்டாலும் இரு கட்சிகளும் மிகவும் காட்டமாக விமர்சனம் செய்வதில்லை. கடந்த 34 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சியில் இருந்த இடதுசாரிகளை ஆட்சியில் இருந்து இருகட்சி கூட்டணிதான் அகற்றியது.
காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் மம்தாவுடன் நட்புறவு பாராட்டியபோதிலும், மாநிலத்தில் இரு கட்சிகளும் எதிர்திசையில்தான் பயணிக்கின்றன. மாநிலத்தில் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT