Published : 28 Mar 2019 07:51 AM
Last Updated : 28 Mar 2019 07:51 AM

தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில் 9.5 கோடி வாக்காளர்களுக்கு ரூ.19000 கோடியை வழங்குகிறது அரசு

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், பிரதமரின் விவசாயிகள் நல நிதி திட்டத்தின் கீழ் 9.5 கோடி வாக்காளர்களுக்கு ரூ.19 ஆயிரம் கோடி வழங்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் உள்ள சுமார் 12.5 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம், 3 தவணைகளாக வழங்கப்படும் என கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. பிரதமரின் விவசாயிகள் நல நதி என்ற இந்த திட்டம் முன் தேதியிட்டு செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதன்படி முதல் கட்டமாக நாடு முழுவதும் 4.76 கோடி விவசாயிகளின் விவரங்கள் திரட்டப்பட்டன. இந்தத் திட்டம் கடந்த மாத இறுதியில் தொடங்கி வைக்கப்பட்டது. 2.83 கோடி பேரின் வங்கிக் கணக்கில் முதல் தவணையாக தலா ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதிவரை 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

இதையடுத்து, நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பே திரட்டப்பட்ட விவரங்களின் அடிப்படையில் மீதமுள்ள சுமார் 1.93 கோடி பயனாளிகளுக்கு வரும் 31-க்குள் ரூ.2 ஆயிரம் வழங்க அனுமதிக்க வேண்டும் என மத்திய வேளாண் அமைச்சகம் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தது. இவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் 2-ம் தவணையை வழங்க அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தது.

இதற்கு தேர்தல் ஆணையம் அளித்துள்ள பதிலில், “தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பு அடையாளம் காணப்பட்ட சிறு விவசாயிகளுக்கு மட்டும் நிதியுதவி வழங்கலாம்” என கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, சுமார் 4.83 கோடி விவசாயிகளுக்கு தேர்தலுக்கு முன்பாகவே 2 தவணைகளாக ரூ.19 ஆயிரம் கோடி வழங்கப்பட உள்ளது. அதாவது ஒரு விவசாய குடும்பத்தில் 2 பேருக்கு வாக்குரிமை இருப்பதாக வைத்துக் கொண்டால், இந்த நிதியுதவியால் தேர்தல் நேரத்தில் சுமார் 9.5 கோடி வாக்காளர்கள் பயன்பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், இதுபோன்ற நிதியுதவி வழங்குவது முறையல்ல என நிதித் துறை முன்னாள் செயலாளர் அர்விந்த் மாயாராம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x