Published : 28 Mar 2019 07:22 AM
Last Updated : 28 Mar 2019 07:22 AM
ரயில் மற்றும் விமான டிக்கெட்களில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம் பெற்றது தொடர்பாக ரயில்வே, விமானப் போக்குவரத்து துறை அமைச்சகங்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் சமீபத்தில் ஏர் இந்தியா நிறுவனம் பயணிகளுக்கு வழங்கிய டிக் கெட்டில் பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி ஆகியோரின் படங்கள் அச்சிடப்பட்டிருந்தன. அதேபோல, பல பகுதிகளில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட ரயில் டிக்கெட் களிலும் பிரதமர் மோடியின் படங்கள் இடம் பெற்றதாகவும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தேர்தல் விதிகளை மீறிய செயல் என்றும் புகார் எழுந்தது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் திரிணமூல் காங்கிரஸ் புகார் செய்தது. ரயில்வே டிக்கெட்டின் பின்புறம் மத்திய அரசின் சாதனைகளை விளக்கியிருப்பதுடன் பிரதமர் மோடியின் படமும் இடம் பெற்றிருப்பதாகவும் அரசு பணத் தில் பொதுமக்கள் மனதில் மோடி மீது செல்வாக்கை ஏற்படுத்தும் வகையில் இது இருப்பதாகவும் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து, மோடியின் படம் இடம் பெற்ற டிக்கெட்களை திரும்பப்பெற ரயில்வே நிர்வாகம் கடந்த வாரம் முடிவு செய்தது. பிரதமர் படம் அச்சிடப்பட்ட டிக்கெட் களை பயன்படுத்தக்கூடாது என்று ரயில்வேயின் 17 மண் டலங்களுக்கும் அறிவுறுத்தப் பட்டது. விமான டிக்கெட்களில் வெளியான மோடியின் படங்கள் விளம்பரதாரர்களின் விளம்பரங்கள் எனவும் தேர்தல் நடத்தை விதிமீறல் என்றால் அவை வாபஸ் பெறப்படும் என்றும் ஏர் இந்தியாவும் தெரிவித்தது.
இந்நிலையில், டிக்கெட்டில் மோடியின் படங்கள் இடம் பெற்றது தொடர்பாக ரயில்வே துறைக்கும் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கடந்த 10-ம் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், டிக்கெட்டில் பிரதமர் படம் இடம் பெற்றது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்றும் இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT