Last Updated : 23 Mar, 2019 11:46 AM

 

Published : 23 Mar 2019 11:46 AM
Last Updated : 23 Mar 2019 11:46 AM

பாஜக 3-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நள்ளிரவு வெளியீடு: பூரியில் மோடி போட்டியிடவில்லை

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 3-வது  கட்ட பட்டியலை பாஜக நேற்று நள்ளிரவில் வெளியிட்டது.  இதில் 2-வது இடமாக பூரியில் பிரதமர் மோடி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த தொகுதியில் பாஜகவின் செய்தித்தொடர்பாளர் சம்பித் பித்ரா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், பிரதமர் மோடி 2-வதாக போட்டியிடும் இடம் குறித்த ரகசியம் காக்கப்பட்டு வருகிறது.

3-வது கட்டமாக பாஜக சார்பில் 36 வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர், இதில் மகாராஷ்டிராவில் 6 வேட்பாளர்களும், ஒடிசாவில் 5 வேட்பாளர்களும், அசாம், மேகாலயாவில் ஒரு வேட்பாளரும் மக்களவை வேட்பாளர்களாக  அறிவிக்கப்பட்டனர். இது தவிர்த்து ஏப்ரல் 11-ம் தேதி மக்களவைத் தேர்தலோடு சேர்த்து சட்டப்பேரவைக்கு நடைபெறும் தேர்தலுக்காக 22 சட்டப்பேரவை வேட்பாளர்களையும் பாஜக அறிவித்தது.

இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக சார்பில் இருக்கும் தற்போதுள்ள 6 எம்.பி க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் மகளும், தற்போது பாரமதி தொகுதி எம்.பியாக இருக்கும் சுப்ரியா சுலேவுக்கு எதிராக பெண் வேட்பாளரை பாஜக நிறுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து பாஜக 25 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. 25 இடங்களில் 22 இடங்களுக்கான வேட்பாளர்கள் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது எம்.பியாக இருக்கும் கிரிஷ் பாபத், அனில் ஷிரோல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அசாம் மாநிலத்தில் மாநில அமைச்சராக இருக்கும் பாலப் லோச்சனுக்கு தேஜ்பூரில் வாய்ப்பு வழங்கப்பட்டு, அந்த தொகுதி எம்.பியாக இருக்கும் ராம் பிரசார் சர்மாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x