Last Updated : 18 Mar, 2019 04:37 PM

 

Published : 18 Mar 2019 04:37 PM
Last Updated : 18 Mar 2019 04:37 PM

"தான் பிடிபட்டதும், தேசத்தையே காவலாளி ஆக்கிவிட்டார் மோடி": ராகுல் காந்தி விளாசல்

பிரதமர் மோடி தான் ரஃபேல் போர்விமான ஒப்பந்தத்தில் சிக்கிக்கொண்டதும், தேசத்தையே காவலாளியாக்கிவிட்டார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடினார்.

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதிவரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தின் வடபகுதியில் உள்ள கலாபுர்கியில்  இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்று பேசியதாவது:

கடந்த இரு நாட்களாக பிரதமர் மோடி சவுகிதார் நரேந்திர மோடி(காவல்காரர் நரேந்திரமோடி) என்று வெளியிட்டு, நானும்கூட காவல்காரன் என்று பிரச்சாரம் செய்து வருகிறார். ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பல்வேறு முறைகேடுகளைச் செய்தவர் மோடி.  அவர் அதில் சிக்கியதும், இந்த தேசத்தையே காவல்காரராக்கிவிட்டார்.

இதற்கு முன் ஒருமுறை கூட  இந்த தேசத்தை காவலாளியாக்கப் போகிறேன் என்று கூறியதில்லை. மக்கள் என்னை பிரதமராக்கவில்லை, என்னை காவல்காரராக்கி இருக்கிறார்கள் என்று கூறினார். ஆனால், இப்போது, ஒட்டுமொத்த தேசத்தையே காவல்காரராக்கி இருக்கிறார்.

யாருக்கு மோடி காவல்காரராக இருந்திருக்கிறார் ?. அனில் அம்பானி, மெகுல் சோக்சி, நீரவ் மோடி ஆகியோருக்குத்தான் பிரதமர் மோடி காவல்காரராக இருந்துள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான அரசு மாற்ற முயற்சிக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் 1000, 500 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கி மக்களை சிரமத்துக்குள்ளாக்கியவர் மோடி.

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் விவசாயிகளின் பயிர்கடனை தள்ளுபடி செய்தது. அதபோல, மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும்

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

கடந்த இரு நாட்களுக்கு முன் பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் தனது  பெயரை சவுக்கிதார் நரேந்திர மோடி என்று மாற்றினார். அதாவது நானும்கூட காவலாளிதான் என்று பெயரை மாற்றினார். நாட்டில் ஊழலுக்கு எதிராகவும், சமூகக் கொடுமைக்ளுக்கு எதிராகவும் போராடும் அனைத்து மக்களும் காவலாளிதான் என்று தெரிவித்திருந்தார். இதைப் பார்த்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பெயருக்கு முன்னால் சவுகிதார் என்ற இந்தி வார்த்தையை சேர்த்துவிட்டனர். இதைக் குறிப்பிட்டு இன்று ராகுல் காந்தி பேசினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x