Published : 17 Mar 2019 07:17 AM
Last Updated : 17 Mar 2019 07:17 AM
பெங்களூருவில் பெண் ராணுவ அதிகாரியை பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் மேஜர் பதவியில் இருக்கும் அதிகாரியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பெங்களூரு மாநகர கிழக்கு உதவி ஆணையர் ராகுல் குமார் கூறியதாவது:பெங்களூருவில் உள்ள ஏ.எஸ்.சி மையத்தில் கடந்த மாதம் 4-ம் தேதி ராணுவ அதிகாரி ஒருவர் ஓய்வு பெற்றதையொட்டி இரவு விருந்து நிகழ்ச்சி நடந்தது.
அந்த விருந்து முடிந்த பிறகு, மேஜர் அமித் சவுத்ரி என்பவர் தன்னுடன் பணியாற்றும் 29 வயதான பெண் அதிகாரியை வீட்டில் விடுவதற்காக தனது காரில் அழைத்து சென்றுள்ளார்.
மது போதையில் இருந்த அவர், பழைய விமான நிலைய சாலையில் காரை நிறுத்தி, பெண் ராணுவ அதிகாரியை பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து புகார் அளித்தால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி, அதற்கு மறுநாள் இந்த சம்பவம் குறித்து தமது ராணுவ உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ராணுவ அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி, இச்சம்பவம் தொடர்பாக விவேக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
பலாத்கார சம்பவம் நடந்த பகுதி, பழைய விமான நிலைய சாலை என்பதால், தற்போது இவ்வழக்கு அல்சூர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை விரைவுப்படுத்தியுள்ள அல்சூர் போலீஸார், முதல்கட்டமாக மேஜர் அமித் சவுத்ரியின் காரை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், அவரை நேற்று காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அவருக்கு மார்ச் 23-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால் அவரை கைது செய்யவில்லை. இவ்வாறு ராகுல் குமார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT