Published : 23 Feb 2019 10:04 AM
Last Updated : 23 Feb 2019 10:04 AM
கர்நாடக மாநில பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா 'ஆப்ரேஷன் தாமரை' மூலம் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களுடன் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.
இதன் தொடர்ச்சியாக, மஜத எம்எல்ஏ நாகன கவுடா மற்றும் அவரது மகன் சரண கவுடாவிடம் எடியூரப்பா பேரம் பேசியதாக கூறப்படும் ஆடியோ பதிவுகளை முதல்வர் குமாரசாமி அண்மையில் வெளியிட்டார்.
இதுதொடர்பான புகாரின் பேரில், எடியூரப்பா உட்பட 4 பேர் மீது ஊழல் தடுப்பு, கூட்டுச் சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி எடியூரப்பா சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நேற்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, ''போலீஸார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய முடியாது. இவ்வழக்கு தொடர்பாக எடியூரப்பா உள்ளிட்ட 4 பேரிடமும் விசாரிக்க இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது'' என உத்தரவிட்டார்.
மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில், இந்த வழக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என பாஜகவினர் கருதினர். தற்போது இவ்வழக்கில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருப்பதால், அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT