Last Updated : 22 Feb, 2019 08:46 AM

 

Published : 22 Feb 2019 08:46 AM
Last Updated : 22 Feb 2019 08:46 AM

கர்நாடகாவில் தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸ் - மஜத கட்சிக்கு இடையே இழுபறி: குமாரசாமி அதிக தொகுதி கோருவதால் சித்தராமையா அதிருப்தி

கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. முதல்வர் குமாரசாமி 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்பதால், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து காங்கிரஸும் மதசார்பற்ற ஜனதா தளமும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணி வரும் மக்களவை தேர்தலிலும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி விரைவில் வெளியாகவுள்ள நிலையில், காங்கிரஸ் - மஜத இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை கடந்த வாரம் தொடங்கியது. முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோருடன் முதல்வர் குமாரசாமி, மஜத மாநில தலைவர் விஷ்வநாத் ஆகியோர் மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் இறுதி முடிவு எட்டப்படாமல் உள்ளது.

இதுகுறித்து மஜத வட்டாரத்தில் கூறும்போது, “கர்நாடகாவில் கடந்த தேர்தல்களில் மொத்தமுள்ள 28 தொகுதிகளிலும் மஜத போட்டியிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் எங்களது கட்சிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. தற்போது எங்களது தலைமையில் ஆட்சி நடைபெறுவதால் 28 தொகுதிகளில் 15 தொகுதிகளை கோரினோம். அதற்கு காங்கிரஸ் மறுத்ததால் 12 வரை குறைத்துக்கொண்டோம். அதற்கும் காங்கிரஸ் ஒப்புக் கொள்ளாததால் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை” என்றனர்.

இதனிடையே முதல்வர் குமாரசாமி, “நாங்கள் காங்கிரஸிடம் பிச்சை கேட்கவில்லை. எங்கள் கட்சியின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அதிக தொகுதிகளைக் கேட்பது எங்கள் உரிமை.எங்கள் கட்சியின் கவுரவத்துக்கு குறைவராமல் தொகுதிகளை காங்கிரஸ் ஒதுக்க வேண்டும். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தேவகவுடா சந்தித்து பிரச்சினைக்கு தீர்வு காண்பார்” என்று பகிரங்கமாக தெரிவித்தார்.

இதற்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா, “மஜதவுடன் நாங்கள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளோம். எனவே யாரும் பிச்சை எடுக்கவும் இல்லை. கொடுக்கவும் இல்லை. காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் நடத்திய ஆலோசனையில் மஜதவுக்கு 10 தொகுதிகள் தரக்கூடாது என அனைவரும் வலியுறுத்தினர். அதன்படியே நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். விரைவில் இரு கட்சி தலைவர்களும் ஆலோசனை நடத்தி, தொகுதிப் பங்கீடு குறித்து அறிவிப்போம்” என்றார்.

பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு ஆதரவு அளிப்பது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறும்போது, “பிரகாஷ் ராஜ் என்னிடம் ஆதரவு கேட்டார். கட்சி மேலிடத்தின் அறிவுரைப்படி தான் இதில் முடிவெடுக்க முடியும். காங்கிரஸில் இணைந்தால் ஆதரவு கொடுப்போம் என அவரிடம் தெரிவித்தேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x