Published : 21 Feb 2019 10:26 AM
Last Updated : 21 Feb 2019 10:26 AM
மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், முதல்வர் பதவி தொடர்பாக இரு கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்களும் முரண்பட்ட கருத்தை தெரிவித்துள்ளனர்.
நீண்ட இழுபறிக்குப் பிறகு மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா இடையே கடந்த 18-ம் தேதி உடன்பாடு ஏற்பட்டது. மொத்தம் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளில், பாஜக 25-லும் சிவசேனா 23-லும் போட்டியிட ஒப்புக் கொண்டுள்ளன. இதுபோல அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் சரிசமமாக தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வது என உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் முதல்வர் பதவி யாருக்கு என்பது தெளிவாக அறிவிக்கப்படவில்லை.
எனினும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது கட்சியின் மூத்த தலைவர்களிடம் நேற்று முன்தினம் கூறும்போது, “அனைத்து பதவிகளையும் (முதல்வர் உட்பட) சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினேன். இதற்கு பாஜக ஒப்புக் கொண்டது. எனவேதான் கூட்டணிக்கு ஒப்புக் கொண்டேன்” என்றார்.
இந்நிலையில், பாஜகவைச் சேர்ந்த மாநில அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் நேற்று கூறும்போது, “சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறும் கட்சிக்குதான் முதல்வர் பதவி” என்றார். இதுகுறித்து சிவசேனாவைச் சேர்ந்த அமைச்சர் ராம்தாஸ் கதம் கூறும்போது, “முதல்வர் பதவியை சுழற்சி முறையில் விட்டுக் கொடுப்பது என உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதை ஏற்கவில்லை என்றால், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என எங்கள் கட்சித் தலைவரை வலியுறுத்துவோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT