Published : 21 Feb 2019 08:57 AM
Last Updated : 21 Feb 2019 08:57 AM
அறுபது நாடுகளின் 225 திரைப்படங்கள் இடம்பெறும் பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது.
11-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா இன்று (வியாழக்கிழமை) மாலை தொடங்கி 28-ம் தேதி வரை பெங்களூருவில் உள்ள ஓரியன் மாலில் நடைபெறுகிறது.
மொத்தம் 8 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளைச் சேர்ந்த படங்கள் மட்டுமல்லாமல், 60 நாடுகளின் 225 திரைப்படங்களும் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தமிழில் இயக்குநர் பிரியா கிருஷ்ணசுவாமி இயக்கிய 'பாரம்', வசந்த் சாய் இயக்கிய 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' ஆகிய இரு திரைப்படங்களும் திரையிட தேர்வாகியுள்ளன.
ஊடகவியலாளர் பிரியா துவசேரி இயக்கிய தூத்துக்குடியில் முத்துக்குளிக்கும் பெண்கள் பற்றிய ''கோரல் வுமன்' ஆவணப்படமும் திரையிடப்படுகிறது. காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி, அவரைப் பற்றிய 4 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
இவைதவிர, ஈரான், போலந்து, சீனா, இலங்கை, கொரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களும் அதிகளவில் திரையிடப்படுவதால் அங்குள்ள இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். திரைப்பட கலை தொடர்பான கருத்தரங்குகள், பயிலரங்குகள், கலந்தாய்வு கூட்டங்கள் ஆகியவையும் நாள்தோறும் நடைபெறுகின்றன.
இந்நிகழ்ச்சியின்போது, அண்மையில் மறைந்த நடிகர்கள் அம்பரீஷ், சி.எஸ்.லோகநாத், எம்.எல்.வியாசவராவ், வங்காள திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. அதேவேளையில், திரைப்பட வசனகர்த்தாவும், முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதியின் பெயர் இந்தப் பட்டியலில் விடுபட்டிருப்பதால், தமிழ் திரை ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கர்நாடக முதல்வர் குமாரசாமி இன்று மாலை விதான சவுதா வளாகத்தில் இந்நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். இதில் இந்தி திரைப்பட இயக்குநர் ராகுல் ராவைல், மலையாள திரைப்பட இயக்குநர் ஷாஜி என். கருண் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT