Published : 21 Feb 2019 09:14 AM
Last Updated : 21 Feb 2019 09:14 AM
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இந்திய விமானப் படை சார்பில் கண்காட்சி மற்றும் சாகச நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இதில் ஏராளமான போர் விமானங்கள், ராணுவ ஹெலிகாப்டர்கள் பங்கேற்று சாகசங்களில் ஈடுபட்டன. இந்த சாகச நிகழ்ச்சியில் பிரான்ஸ் நாட்டின் ரஃபேல் ஜெட் விமானங்களும் இடம்பெற்றன.
இதனிடையே, இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்ஸாண்டர் சைக்லரிடம் ரஃபேல் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:பிரான்ஸ் நாட்டுடன் இந்தியா மேற்கொண்டிருக்கும் ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்தவித விதிமீறலும், முறைகேடும் நடைபெறவில்லை. இந்த நிகழ்ச்சியிலேயே 3 ரஃபேல் விமானங்கள் கலந்துகொண்டு, மெய்சிலிர்க்கும் வகையில் சாகசங்கள் புரிந்திருக்கின்றன. பல்வேறு நவீன அம்சங்களையும், திறன்களையும் ரஃபேல் ரக விமானங்கள் பெற்றிருக்கின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம்மேற்கொண்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT