Published : 20 Feb 2019 06:31 PM
Last Updated : 20 Feb 2019 06:31 PM

எழுத்தறிவில்லாத மக்கள்தான் போரைப் பற்றிப் பேசுவர்: மெஹ்பூபா முப்தி காட்டம்

 

எழுத்தறிவில்லாத மக்கள்தான் போரைப் பற்றிப் பேசுவர் என்று காஷ்மீர் முன்னாள் முதல்வரும் பிடிபி கட்சியின் தலைவருமான மெஹ்பூபா முப்தி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

புல்வாமாவில் கடந்த பிப்.14-ம் தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு நாடு முழுவதும் பெரும் கண்டனமும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2016 செப்டம்பரில் காஷ்மீரின் யூரி ராணுவ முகாம் மீது ஜெய்ஷ்-இ-முகமது தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடியாக செப்டம்பர் 28-ம் தேதி காஷ்மீரை ஒட்டிய பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவ வீரர்கள் நுழைந்து ஏராளமான தீவிரவாத முகாம்களை அழித்தனர். தற்போதும் அதேபோல பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் மீண்டும் துல்லியத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நாக்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ''காஷ்மீரில் தீவிரவாதிகளின் அட்டூழியத்தை முடிவுகட்ட ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டு விட்டது. தீவிரவாதிகளின் இனிமேல் தப்பிக்க முடியாது. அவர்களின் தலைவிதி வீரர்களால் தீர்மானிக்கப்படும்'' என ஆவேசமாகப் பேசினார்.

இதற்கிடையே புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா, பாகிஸ்தானின் மீது போர் தொடுக்க வேண்டும் எனவும் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காஷ்மீர் முன்னாள் முதல்வரும் பிடிபி கட்சியின் தலைவருமான மெஹ்பூபா முஃப்தி, ''இது மாதிரியான நேரங்களில் எழுத்தறிவில்லாத மக்கள்தான் போரைப் பற்றிப் பேசுவார்கள். இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுமே அணு ஆயுதங்களை வைத்துள்ளன. பேச்சுவார்த்தை என்ற ஒரு வழி இரண்டு தரப்புக்குமே இருக்கிறது. எனில் போர் குறித்த கேள்விகள் எழுப்பப்படுவது ஏன் என்று புரியவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x