Published : 20 Feb 2019 04:42 PM
Last Updated : 20 Feb 2019 04:42 PM
நானும் என் தந்தையை தீவிரவாதத்தால் இழந்தேன் என்பதால், உங்கள் வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்று புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட சிஆர்பிஎப் வீரரின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த வாரம் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ன.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம், ஷாம்லி நகரைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் ஒருவர் புல்வாமா தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரின் குடும்பத்தினரைச் சந்தித்து இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பாப்பர், பொதுச் செயலாளர் ஜோதிர்தியா சிந்தியா ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர்.
அப்போது, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் சிஆர்பிஎப் குடும்பத்தாரிடம் தாங்களும் தீவிரவாதத்தால்தான் சிறுவயதிலேயே தந்தையை இழந்தோம் என்று தெரிவித்தனர். உங்களுக்கு உறுதுணையாக இருப்போம், தேவையான உதவிகளை காங்கிரஸ் கட்சி அளிக்கும் என்று இருவரும் உறுதியளித்தனர்.
வீர மரணம் அடைந்த வீரரின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்த பிரியங்கா காந்தி பேசுகையில், " உங்கள் சோகம், உணர்ச்சிகளை நாங்கள் புரிந்துகொண்டோம். நாங்கள் மட்டுமல்ல இந்த தேசமே உங்களுக்கு ஆதரவு அளிக்கிறது. தனிமைப்படுத்தப்பட்டோம் என்று உணர வேண்டாம். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், உங்களை கவனமாகப் பார்த்துக்கொள்வோம்" எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், " நீங்கள் தீவிரவாதத்தால் மகனை இழந்ததுபோல்தான் நானும், கடந்த 1991-ம் ஆண்டு நடந்த தீவிரவாதத் தாக்குதலில் என் தந்தையை சிறுவயதிலேயே இழந்தேன். உங்களின் வலியை என்னால் புரிந்து கொள்ள முடியும். இது உங்களுக்கு சோகமான நாள் என்றாலும், உங்களுக்கு மட்டுமல்ல, தேசத்துக்கே உங்களின் மகன் பெருமை சேர்த்துள்ளார்.
குடும்பத்தினர் என்ற அடிப்படையில் உங்கள் மகன் மீது அன்பு வைத்துள்ளீர்கள். ஆனால், நாட்டுக்காக உயிர் நீத்த உங்கள் மகன் மீது தேசமே அன்பு வைத்துள்ளது. அவரை நினைத்து தேசம் பெருமை கொள்கிறது. தாக்குதலில் பலியான அனைத்து வீரர்களும் பெருமைக்குரியவர்கள். இந்தியா வீரத்தின் விளைநிலம். அதை சிஆர்பிஎப் வீரர்கள் நிரூபித்துவிட்டார்கள். இந்தியாவை உலகில் உள்ள எந்த சக்தியும் பிரிக்க முடியாது என்று சொல்லிக்கொள்கிறேன். நாங்கள் உங்களுக்கு எப்போதும் துணை இருப்போம்" என ராகுல் காந்தி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT