Published : 19 Feb 2019 12:09 PM
Last Updated : 19 Feb 2019 12:09 PM
பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றான ஹம்பியில் உள்ள விஷ்ணு கோயிலின் தூண்களை உடைத்து சேதப்படுத்திய இளைஞர்களுக்கு ரூ.2.8 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தூண்களின் சீரமைப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது.
யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றான ஹம்பி கர்நாடக மாநிலத்தில் உள்ளது. இங்குள்ள விஷ்ணு கோயிலின் தூண்களை சில இளைஞர்கள் எட்டி உதைத்து, அடித்து உடைத்தனர்.
விசாரணையில் அவர்கள் ஹம்பிக்கு சுற்றுலா வந்த ராஜ்பாபு, ராஜா, ராஜேஷ் சவுத்ரி மற்றும் ஆயுஷ் சாஹு ஆகியோர் எனத் தெரியவந்தது. இதில் ராஜ்பாபுவும், ராஜேஷ் சவுத்ரியும் தினக்கூலிகள். இவர்கள் பிஹாரைச் சேர்ந்தவர்கள். டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் பணிபுரியும் ஆயுஷ் சாஹூ பெங்களூருவைச் சேர்ந்தவர். ராஜா பொறியியல் மாணவர்.
ஹம்பியின் விஷ்ணு கோயிலுக்கு வந்தவர்கள் அங்கிருந்த தூண்களில் ஏறினர். உற்சாக மிகுதியில் அவற்றை உடைத்து சேதப்படுத்தினர். ஆயுஷ் சாஹூ வீடியோ எடுக்க மற்ற மூவரும் நினைவுச் சின்னங்களை அழித்தனர். அதுதொடர்பான வீடியோ வைரலானவுடன் இந்தியத் தொல்லியல் ஆய்வகம், ஹம்பி காவல்துறையிடம் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி புகார் அளித்தது. இதுகுறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட போலீஸார் 4 இளைஞர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து நீதிமன்றம், இளைஞர்கள் நால்வருக்கும் தலா 70,000 ரூபாய் அபராதம் விதித்தது. இத்தொகையைக் கொண்டு தூண்களைச் சீரமைக்க இந்தியத் தொல்லியல் ஆய்வகம் முடிவு செய்தது.
இந்நிலையில் தூண்கள் கீழே விழாமல் இருக்கவும் சேதமடையாமல் இருக்கும் வகையிலும் தூண்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காகத் தரையிலும் தூண்களின் அடிப்பகுதியிலும் துளைகள் இடப்படும். அதில் 7 முதல் 8 இன்ச் இரும்புக் கம்புகள் நுழைக்கப்பட்டு தூண்கள் பலப்படுத்தப்பட உள்ளன.
இதற்கான வேலைகள் தொடங்கி, முழு வீச்சில் நடந்து வருகின்றன.
இதற்கிடையே தூண்களை விஷமிகள் சேதப்படுத்துவதைத் தடுக்கும் வகையில், விஷ்ணு கோயிலில் ஆயுதம் தாங்கிய காவலர் ஒருவர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT