Published : 18 Feb 2019 02:23 PM
Last Updated : 18 Feb 2019 02:23 PM

சிஆர்பிஎப் வீரரின் உடலுடன் செல்ஃபி எடுத்தேனா?- மத்திய அமைச்சர் விளக்கம்

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரரின் உடலுடன் செல்ஃபி எடுத்தேனா என்று மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம் விளக்கமளித்துள்ளார்.

 

புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் உரிய மரியாதையுடன் உடலை அடக்கம் செய்தன.

 

இந்தத் தாக்குதலில் கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், திரிகைபேட்டா கிராமத்தைச் சேர்ந்த வசந்தகுமார் என்ற சிஆர்பிஎப் வீரரும் மரணமடைந்தார். அவரின் உடல் விமானம் மூலம் கேரளா கொண்டு வரப்பட்டு, சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில், மாநில அமைச்சர்களும் காவல்துறை அதிகாரிகளுடன் பங்கேற்றனர். அவர்களுடன் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ள அல்போன்ஸ் கண்ணன்தானம் அஞ்சலி செலுத்தினார்.

 

இறுதிச்சடங்கின் போது, வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர் வசந்தகுமாரின் உடலுக்கு முன் நின்றுகொண்டு மத்திய அமைச்சர் அல்போன்ஸ் எடுத்த புகைப்படத்தை தனது பேஸ்புக்கில் வெளியிட்டார்.

 

இதையடுத்து வீரர் உடல் முன் மத்திய அமைச்சர் அல்போன்ஸ் செல்ஃபி எடுத்து வெளியிட்டார் என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள அல்போன்ஸ், ''வீரரின் உடலுடன் நான் செல்ஃபி எடுக்கவில்லை. உடல் அடங்கிய பெட்டியின் அருகே நின்றபோது சிலர் என்னைப் புகைப்படம் எடுத்தனர்.

 

அதில் ஒரு புகைப்படத்தை என்னுடைய உதவியாளர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். ஆனால் நான் செல்ஃபி எடுத்ததாகத் தவறான செய்திகள் உலவுகின்றன. மத்திய அமைச்சரான என் மீது அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்துவது சட்டவிரோதமானது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார் அல்போன்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x