Published : 16 Feb 2019 04:08 PM
Last Updated : 16 Feb 2019 04:08 PM

நவ்ஜோத் சிங் நீக்கம்: பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்தால் கபில் சர்மா நிகழ்ச்சியில் பங்கேற்க ரசிகர்கள் எதிர்ப்பு

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்த பஞ்சாப் மாநில அமைச்சரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான நவ்ஜோத் சிங் சித்து, கபில் சர்மா நடத்தும் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில், 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்துக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தான் காரணம் என்று குற்றம் சாட்டிய மத்திய அரசு, தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. உலக நாடுகளும் இந்தத் தாக்குதலை கண்டித்தன.

இந்தத் தாக்குதல் குறித்து நேற்று கருத்து தெரிவித்த பஞ்சாப் மாநில அமைச்சரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான நவ்ஜோத் சிங் சித்து, " தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒரு சிலர் செய்யும் இதுபோன்ற செயலுக்காக ஒரு நாட்டையே பழிசுமத்துவதா, ஒரு தனிநபரை பழிசுமத்துவதா " என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

நவ்ஜோத் சிங் சித்துவின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியது. நவ்ஜோத் சிங்கின் கருத்துக்கு நெட்டிசன்கள் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கிடையே, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கபில் சர்மா நடக்கும் நிகழ்ச்சியில் சித்து அவருடன் இணைந்து கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார்.

இப்போது, அந்த நிகழ்ச்சியின் ரசிகர்கள், நவ்ஜோத்சிங்கின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அந்த நிகழ்ச்சியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்துவை நீக்கினால்தான் தொடர்ந்து நிகழ்ச்சியைப் பார்ப்போம். இல்லாவிட்டால் அந்த நிகழ்ச்சியைப் புறக்கணிப்போம் என்று சமூக ஊடகங்களிலும், அந்த நிகழ்ச்சியின் ட்விட்டர் தளத்திலும் கண்டனத்தை தெரிவித்தனர்.

இந்நிலையில் ரசிகர்களிடம் இருந்து தொடர்ந்து கண்டனங்கள் வரவே வேறு வழியின்றி, கபில் சர்மா நிகழ்ச்சி யில் இருந்து காங்கிரஸ் எம்எல்ஏ நவ்ஜோத் சிங் சித்துவை நீக்க அந்தத் தனியார் சேனல் முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சித்துவுக்குப் பதிலாக, நடிகை அர்ச்சனா புரன் சிங்கை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த சேனலின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில், " சித்துவின் கருத்தை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. தொடர்ந்து சித்துவை நிகழ்ச்சியில் அமரவைத்தால், ரசிகர்களிடம் இருந்து தேவையில்லாத கண்டனங்களும், சர்ச்சைகளும் உருவாகும். ஆதலால், சித்துவை நீக்க முடிவு செய்துவிட்டோம். அவருக்கு பதிலாக அர்ச்சனா புரன் சிங் பங்கேற்கிறார் " எனத் தெரிவித்தார்.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x