Published : 15 Feb 2019 03:49 PM
Last Updated : 15 Feb 2019 03:49 PM
இது புதிய இந்தியா என்பதை அண்டை நாடு உணர்ந்து கொள்ள வேண்டும், பொருளாதார சிக்கலால் பிச்சை பாத்திரத்துடன் வரும் பாகிஸ்தானுக்கு எந்த ஒரு நாடும் இனிமேல் உதவி செய்யாது என பிரதமர் மோடி ஆவேசமாக கூறினார்.
ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு நேற்று (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவப்படையினர் பேருந்தில் சென்றபோது, அதன் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி 350 கிலோ வெடிபொருட்களுடன் காரை மோதி வெடிக்கச் செய்தார்.
இந்தத் தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த 45 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு துணையாக இருக்கும் பாகிஸ்தானுக்கு நாடுமுழுவதும் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. இந்தநிலையில் ஜான்சியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகையில் பாகிஸ்தானை கடுமையாக சாடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
‘‘புல்வாமா தாக்குதலில் தங்களது இன்னுயிரை நீத்த நமது வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீணாகாது. நமது பாதுகாப்பு படையினரின் வீர தீரத்தை நாடு பல சமயங்களில் கண்டுள்ளது. அவர்களின் துணிச்சல் மற்றும் வீரத்தை சந்தேகப்படும் ஒருவர்கூட இந்த நாட்டில் இருக்க முடியாது.
புல்வாமா தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய சதிகாரர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள். இது புதிய இந்தியா என்பதை பாகிஸ்தான் மறந்து விட்டது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் கையில் பிச்சைப் பாத்திரத்துடன் உலக நாடுகளின் உதவிக்காக நாடுநாடாக ஏறி, இறங்கி வருகிறது. ஆனால் பாகிஸ்தானுக்கு எந்த நாடும் உதவி செய்யாது’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT