Published : 14 Feb 2019 01:25 PM
Last Updated : 14 Feb 2019 01:25 PM
உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசும், மத்தியப் பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசும் அரசு தீவிரவாதத்துக்கு உதாரணம் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி காட்டமாக விமர்சித்துள்ளார்
உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பயிலும் 14 மாணவர்களை தேசியவிரோத சட்டத்தில் ஆளும் பாஜக அரசு கைது செய்தது. அதேபோல மத்தியப்பிரதேச காங்கிரஸ் அரசு கந்தவா பகுதியில் பசுவதையில் ஈடுபட்ட முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 3 பேரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்துள்ளது. இந்த இரு நடவடிக்கைகளுக்கு எதிராக மாயாவதி இன்று காட்டமாக பேட்டியளித்தார்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி லக்னோவில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மத்தியப்பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசும், உ.பி.யில் உள்ள பாஜக அரசைப் போன்று, பசுவதை செய்யும் முஸ்லிம்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும் என்று எச்சரித்துள்ளது. உ.பி.யில் உள்ள பாஜக அ ரசு அலிகார் பல்கலையில் பயிலும் 14 மாணவர்களை தேசவிரோச சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது.
இந்த இரு சம்பவங்களும் அரசு நடத்தும் தீவிரவாத செயலுக்கு உதாரணம், இது கண்டிக்கத்தக்கது. காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு மாயாவதி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT