Published : 14 Feb 2019 12:58 PM
Last Updated : 14 Feb 2019 12:58 PM

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு: ராஜீவ் சக்சேனாவுக்கு இடைக்கால ஜாமீன்

 

 

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் குற்றம்சாட்டபட்டுள்ள ராஜீவ் சக்சேனாவுக்கு பாட்டியாலா நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

 

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2-வது முறையாக ஆட்சியில் இருந்தபோது குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பயணிப்பதற்காக இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

 

ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அந்த நிறுவனம் ரூ.450 கோடி லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக இத்தாலி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அந்த நிறுவனத்தின் 2 உயர் அதிகாரிகள் குற்றவாளிகள் என நிரூபணமானது.

 

இதையடுத்து, இந்தியாவிலும் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த விமானப்படை முன்னாள் தலைமை தளபதி எஸ்.பி.தியாகி, அவரது உறவினர் சஞ்சீவ் மற்றும் ஒரு வழக்கறிஞர் ஆகியோரை சிபிஐ கைது செய்தது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது.

 

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் இந்திய தலைவர் பீட்டர் ஹுலெட்டுக்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல், சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதேபோல ஹெலிகாப்டர் பேர  ஊழலில் ரூ.90 கோடி மோசடி செய்ததாக ராஜீவ் ஷாம்செர் பகதூர் சக்சேனா கடந்த மாதம் 31-ம் தேதி துபாயில் கைது செய்யப்பட்டு இந்தியா அழைத்துவரப்பட்டார். மூன்று நாட்கள் விசாரணைக்குப் பிறகு அதிகாரிகள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரைக் காவலில் வைக்க உத்தரவிட்டது

 

இந்நிலையில் இடைக்கால ஜாமீன் கோரி, அவர் டெல்லி பாட்டியாலா உயர் நீதிமன்றத்தில் மனு தொடர்ந்தார். அதை இன்று விசாரித்த நீதிமன்றம் பிப்ரவரி 22-ம் தேதி ராஜீவ் சக்சேனாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

 

அத்துடன் தலா 5 லட்சம் இரண்டு பிணைத் தொகைகளை ராஜீவ் சக்சேனா செலுத்தவும் உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x