Last Updated : 05 Feb, 2019 03:30 PM

 

Published : 05 Feb 2019 03:30 PM
Last Updated : 05 Feb 2019 03:30 PM

மத்தியப் பிரதேசத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்க புதிய முயற்சி: முதல்வர் கமல்நாத் அதிரடி

மத்தியப் பிரதேச மாநிலத்தில் அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாடத்தைக் குறைக்கும் வகையில், அனைத்துத் தொழிற்சாலைகளும் 70 சதவீதம், உள்மாநில மக்களையே வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று முதல்வர் கமல்நாத் உத்தரவிட்டுள்ளார்.

அனைத்துத் தொழிற்சாலைகளும் 70 சதவீதம் உள்மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும், 30 சதவீதம் மட்டுமே வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். இதை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கு மட்டுமே அரசின் சலுகைகள் கிடைக்கும், ஏற்கனவே இருக்கும் நிறுவனங்களுக்கும், புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கும் இந்த விதி அமலாகும் எனத் அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த பாஜக அரசை வீழ்த்தி, காங்கிரஸ் கட்சிஆட்சிக்கு வந்தது. அங்கு முதல்வராக கமல்நாத் பொறுப்பு வகித்து வருகிறார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதி முதல்வராகப் பொறுப்பேற்ற கமல்நாத்,பதவி ஏற்றவுடன், தொழிற்சாலைகளுக்கான சலுகைகளை அறிவித்தார். அதில் முக்கியமானது உள்ளூர் மக்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கும் தொழிற்சாலைகளுக்கு அதிக சலுகை அளிக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி இப்போது மத்தியப்பிரதேசத்தில் உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது.

முதல்வர் கமல்நாத் ட்விட்டரில் கூறுகையில், "  தேர்தல் வாக்குறுதியில் மாநிலத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது தொழிற்சாலைகளில் 70 சதவீதம் உள்ளூர் மக்களுக்கு வாய்ப்புளித்து வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அவ்வாறு அமர்த்தும் தொழிற்சாலைகளுக்கு சலுகை அளிக்கப்படும் என அறிவித்துள்ளோம். பிஹார், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலையை ஆக்கிமிரத்துள்ளதால் உள்ளூர் மக்களுக்கு வேலை கிடைப்பதில்லை. அதனால், இந்த முடிவு எடுக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கோப்புகளில் கையொப்பமிட்டுள்ளேன் " எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x