Published : 05 Feb 2019 02:57 PM
Last Updated : 05 Feb 2019 02:57 PM

வேறுசாதியைச் சேர்ந்தவரை காதலித்த மகளைக் கொன்ற தந்தை: ஆந்திராவில் கொடூரம்

ஆந்திரா மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் வேறு சாதியைச் சேர்ந்த தனது கல்லூரி நண்பரைக் காதலித்ததால், பெற்ற மகளை தந்தையை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது:

பிரகாசம் மாவட்டம், தாலூர் வட்டம், கொட்டாபள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.வெங்கா ரெட்டி. இவரின் மகள் கே. வைஷ்ணவரி(வயது20). ஓங்கோல்நகரில் உள்ள தனியார் கல்லூரியில் வைஷ்ணவி பி.காம் படித்துவந்தார்.

தனது கல்லூரியில் படிக்கும், லிங்காசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த வேறு சாதியைச் சேர்ந்த நண்பரை வைஷ்ணவி காதலித்துள்ளார். இருவரும் இரு ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இதைச் சமீபத்தில் அறிந்த வைஷ்ணவியின் தந்தை வெங்காரெட்டி கண்டித்துள்ளார். ஆனால் தொடர்ந்து அந்தக் காதலருடன், வைஷ்ணவி பழகிவந்துள்ளார்.

கடந்த 2-ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி, மார்காபுரம் நகரில் ஒரு வீடு எடுத்து தனது காதலருடன் வசிக்கத் தொடங்கியுள்ளார். இதை அறிந்த வெங்கா ரெட்டி, தனது மகள் வைஷ்ணவியைக் கண்டுபிடித்து, வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இதனால், தந்தைக்கும், மகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று காலை, வைஷ்ணவி மாரடைப்பில் இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு அவரின் தந்தை வெங்கா ரெட்டி தகவல் அளித்துள்ளார். வைஷ்ணவி மர்மமான முறையில் இறந்துள்ளார் என்று போலீஸாருக்கு தகவல்அளிக்கப்பட்டதையடுத்து, கொட்டப்பள்ளம் கிராமத்துக்கு நேற்று போலீஸார் சென்று வைஷ்ணவியின் உடலைப் பரிசோதனை செய்தனர்.

அப்போது வைஷ்ணவியின் கழுத்தில் பலத்த காயமும், உடலில் காயமும் இருப்பதைக் கண்டுபிடித்தனர். உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர். மேலும், தாலூர் போலீஸ் நிலையத்தில் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து மகளைக் கொலை செய்த வெங்கா ரெட்டியை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரகாசம் மாவட்டத்தில், கடந்த 4 ஆண்டுகளில் நடந்த 4 ஆணவக் கொலைச் சம்பவம் இதுவாகும். கடந்த 5 மாதங்களுக்கு முன் தாலூர் வட்டம், கங்காவரம் கிராமத்தில் தனது மாமாவைத் திருமணம் செய்த மறுத்து, வேறு சாதியைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்ததால் ஆத்திரமடைந்த தந்தை மகளை கழுத்தை நெறித்து கொலை செய்தார்.

மேலும, கோமலூரு வட்டம், நாகிரெட்டி பள்ளே கிராமத்தில், கடந்த 4 மாதங்களுக்கு முன், இதேப்போன்ற ஆணவக்கொலை சம்பவம் நடந்தது. பிஎஸ்பி வீரரின் மகள் வேறுசாதியைச் சேர்ந்த ஒருவரை மகள் காதலித்ததால், தனது மகளை பிஎஸ்பி வீரர் கொலை செய்து எரித்துவிட்டார். அதன்பின் போலீஸுக்கு தகவல் அளிக்கப்பட்டு பிஎஸ்எப் வீரர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x