Last Updated : 04 Feb, 2019 06:28 PM

 

Published : 04 Feb 2019 06:28 PM
Last Updated : 04 Feb 2019 06:28 PM

மாயாவதி, அகிலேஷ், மம்தா, ஸ்டாலினால் மட்டுமே பாஜகவைத் தோற்கடிக்க முடியும்- கேஜ்ரிவால் பாராட்டு

மாயாவதி, அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோரால் மட்டுமே பாஜகவை தோற்கடிக்க முடியும் என டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

 

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அவர், முர்ஷிதாபாத்தில் அரசு திட்டங்களை துவக்கி வைத்துப்பேசினார்.

 

அப்போது கேஜ்ரிவால் ஆற்றிய உரையில், ''உ.பி.யில் மாயாவதி மற்றும் அகிலேஷ், மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா மற்றும் தமிழகத்தில் ஸ்டாலின் ஆகியோரால் மட்டுமே பாஜகவை தோற்கடிக்க முடியும். இதுபோல், டெல்லியில் அக்கட்சியை ஆம் ஆத்மி தோல்வியுறச் செய்யும்'' எனத் தெரிவித்தார்.

 

டெல்லியின் ஏழு மக்களவை தொகுதிகளையும் தான் காங்கிரஸுக்கு விட்டுத்தரத் தயாராக இருப்பதாகக் கூறிய கேஜ்ரிவால், அக்கட்சியால் பாஜகவைத் தோற்கடிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

 

பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து ஒன்றுகூடிய எதிர்க்கட்சிகளில் ஆம் ஆத்மியும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்த யூகத்துக்கு முடிவு கட்டும் வகையில் பேசிய கேஜ்ரிவால் டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களில் தம் கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

 

வரும் 2019 மக்களவை தேர்தலில் பாஜக வென்றால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி நாட்டை அழித்து விடுவார்கள் எனவும் கேஜ்ரிவால் எச்சரித்தார். டெல்லியின் அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி பாஜகவை தோற்கடிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x