Last Updated : 04 Feb, 2019 04:32 PM

 

Published : 04 Feb 2019 04:32 PM
Last Updated : 04 Feb 2019 04:32 PM

தேசிய ஜனநாயக கூட்டணியின் கதவு எப்போதுமே சந்திரபாபுவுக்கு இனி திறக்காது.: அமித் ஷா காட்டம்

சந்திரபாபு நாயுடு யு டர்ன் முதல்வர் என காட்டமாகப் பேசியிருக்கிறார் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா.

ஆந்திர மாநிலம் விஜியநகரத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சரமாரியாக தாக்கிப் பேசினார் அமித் ஷா.

அவர் பேசியதாவது:

அன்று மத்தியில் அடல் பிஹாரி தலைமையில் ஆட்சி அமைந்தபோது சந்திரபாபு நாயுடு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வந்து இணைந்தார். 2004-ல் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் தேஜ கூட்டணியை விட்டு காங்கிரஸில் ஐக்கியமானார்.

பின்னர் 2014-ல் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்தார். இப்போது காங்கிரஸை ஆதரிக்கிறார்.

தெலங்கானா தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தார். தேர்தலில் தோல்வியுற்றவுடன் மெகா கூட்டணி என்று பேசுகிறார்.

2019 மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிகை முடிந்தவுடன் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும். அப்போது எங்களுடன் வந்து இணைய மீண்டும் சந்திரபாபு முயற்சி செய்வார்.

ஆனால், உங்களிடம் ஒன்று உறுதியாக சொல்ல விரும்புகிறேன். தேசிய ஜனநாயக கூட்டணியின் கதவு இனி எப்போதுமே சந்திரபாபுவுக்கு இனி திறக்காது.

அவர் ஆந்திர மக்களை தவறாக வழிநடத்தியிருக்கிறார். அவரை யுடர்ன் முதல்வர் என்று அழைப்பதே சாலச் சிறந்ததாக இருக்கும்.

எப்போது ஆந்திர மக்கள் அவரது ஆட்சித் திறன் மீது அதிருப்தி கொண்டு ஆவேசமடைந்தனரோ, எப்போது அவர் அவரது மகனை முதல்வராக்கும் முயற்சியை மக்கள் எதிர்த்தனரோ அப்போது சந்திரபாபு நாயுடு பழியை பாஜக மீது போட்டுவிட்டு ஒதுங்கிக் கொண்டார்.

ஆனால் பாஜக ஆந்திர மாநிலத்துக்கு நிறைய நன்மைகள் செய்திருக்கிறது. ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 10 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 37 லட்சம் கழிவறைகளைக் கட்டியிருகிறோம். 27 லட்சம் இளைஞர்களுக்கு முத்ரா வங்கிக் கடன் கிட்டியுள்ளது. 6 கோடிக்கும் அதிகமானோருக்கு இலவச காஸ் சிலிண்டர்கள் கிடைத்துள்ளன.

எனக்கு ஒரே ஒரு கேள்வி சந்திரபாபு நாயுடுவிடம் கேட்க வேண்டியிருக்கிறது. ஆந்திராவுக்கு ரூ.5,56,000 அளவுக்கு நலத்திட்டங்கள் செய்த பாஜகவை விட்டுவிட்டு ஏன் வெறும் ரூ.1,17,000 கோடி அளவில் நன்மை செய்த காங்கிரஸில் இணைந்தீர்கள்?

தெலுங்கு தேச கட்சியும் ஊழல் கட்சி, காங்கிரஸும் ஊழல் கட்சியே. இந்த இரண்டு கட்சிகளாலும் ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சிக்கு வித்திட முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x