Published : 04 Feb 2019 04:11 PM
Last Updated : 04 Feb 2019 04:11 PM

அந்த வங்கத்து பெண் புலியிடம் ஏன் பிரச்சினை செய்கிறீர்கள்?- மம்தாவை புகழ்ந்த சத்ருகன் சின்ஹா

கொல்கத்தாவில் சிபிஐ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டுள்ள மேற்குவங்க முதல்வரை வங்கத்து பெண் புலி என புகழ்ந்திருக்கிறார் பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா.

கொல்கத்தா போலீஸ் கமிஷனரை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொல்கத்தாவில் ஞாயிறு நள்ளிரவில் இருந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் முதல்வர் மம்தா பானர்ஜி.

"நாட்டை பாதுகாக்கும்வரை எனது சத்தியாகிரகப் போராட்டம் தொடரும்" என்றும் தெரிவித்திருக்கிறார்.

அவருக்கு ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு என பல்வேறு தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பிஹார் மாநிலம் பாட்னா சாஹிப் பாஜக எம்.பி. சத்ருஹன் சின்ஹா ட்விட்டரில் மம்தாவை புகழ்ந்து பாராட்டியிருக்கிறார். வழக்கம்போல் பாஜகவையும் சாடியிருக்கிறார்.

முதலில் அவர் பதிவு செய்த ட்வீட்டில், "ஹவாய் செருப்புகளும் காட்டன் சேலையுமே அடையாளமாகக் கொண்ட பெண் அவர். நாம் (பாஜக) இப்போது நம் மீதான நம்பகத்தன்மையை இழந்துவிட்டோம். மக்கள் நாம் சொல்லும் எல்லாவற்றையும் ஏற்கத் தயாராக இல்லை. அதனால், மம்தாவுக்கு எதிராக பதற்றத்தில் எதிர்வினையாற்ற வேண்டாம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு ட்விட்டராட்டி ஒருவர், நீங்கள் ஏதாவது வங்காள மொழிப்படத்தில் நடிக்கப்போகிறீர்களா என்று கிண்டலாகப் பதிவு செய்திருந்தார்.
அதற்கு பதிலளித்த சத்ருஹன் சின்ஹா, "என்ன நடக்கிறது? மிகவும் கண்டனத்துக்குள்ளான அரசு அமைப்பின் வாயிலாக எதற்காக நாம் நெருப்புடன் விளையாடுகிறோம்? அதுவும் தேர்தல் வரும் வேளையில் இப்படி ஏன் செய்ய வேண்டும்? வங்கத்து பெண் புலி. சோதனைகளைக் கடந்த மக்கள் அபிமானம் பெற்ற அப்பழுக்கற்ற தலைவரை ஏன் குறிவைக்கிறோம்?" எனப் பதிவிட்டார்.

அண்மையில் கொல்கத்தாவில் நடந்த ஒற்றுமைக்கான பேரணியில் சத்ருஹன் சின்ஹா கலந்து கொண்டு மம்தாவுக்கு ஆதரவாகப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x