Last Updated : 04 Feb, 2019 03:31 PM

 

Published : 04 Feb 2019 03:31 PM
Last Updated : 04 Feb 2019 03:31 PM

சிபிஐ நடவடிக்கையில் இருந்து தன்னை காத்துக்கொள்ளவே தர்ணா செய்கிறார்: மம்தா பானர்ஜி மீது பிரகாஷ் ஜவடேகர் குற்றச்சாட்டு

சிபிஐ நடவடிக்கையில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ளவே, முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

சாரதா சிட்பண்ட்ஸ் ஊழல் வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரணை நடத்திவருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் நேற்று விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் சென்றனர். ஆனால், அங்கு கொல்கத்தா போலீஸாருக்கும், சிபிஐ அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

சிபிஐ அதிகாரிகள் முறையான அனுமதியில்லாமல் வந்துள்ளார்கள் எனக் கூறி அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர் போலீஸார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இரவு முதல் கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் தர்ணா போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷாவும் சட்டவிரோதமாக மாநிலத்தைக் கைப்பற்ற முயல்கிறார்கள் என்று கடுமையாக விமர்சித்து மம்தா பானர்ஜி பேசி வருகிறார்.

இந்நிலையில் கொல்கத்தாவில் நிருபர்களுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:

நரேந்திர மோடி அவசரநிலை ஏதும் கொண்டுவரவில்லை. ஆனால், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிதான் அவசரநிலையை ஏற்படுத்தியுள்ளார். சிபிஐ நடவடிக்கையில் இருந்து தன்னை காத்துக்கொள்ளவே மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எச்சரிக்கிறோம். மேற்கு வங்கத்தில் உள்ள அவசரநிலைக்கு எதிராக நாங்கள் போராடுவோம். இந்திரா காந்தி நாட்டில் அவசரநிலையை அறிவித்தபோது, அதை எதிர்த்து நாங்கள் போராடினோம்,வெற்றி பெற்றோம். அதேபோல திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும் தோற்கடிப்போம்.

மேற்கு வங்கத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் எந்தவிதமான பேரணி நடத்தினாலும் தடை விதிக்கப்படுகிறது, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் ஹெலிகாப்டர்கள் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது. இதுதான் ஜனநாயகமா. இது ஒன்றும் அவசரநிலை ஆட்சி அல்ல. இப்படிச் செய்து கொண்டு பிரதமர் மோடியை விமர்சிக்கிறார் மம்தா.

அரசமைப்புச்சட்ட உத்தரவுகள் அனைத்தும் மேற்கு வங்கத்தில் மீறப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டிய தேவை இருக்கிறது. இதைத் தவிர வேறு ஏதும் சொல்வதற்கில்லை.

முதல்வர் மம்தா நடத்தும் தர்ணா போராட்டத்தில் மாநிலத்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்றிருப்பது வியப்பாக இருக்கிறது. போலீஸ் டிஜிபி வீரேந்திரா, மாநில பாதுகாப்பு ஆலோசகர் சுராஜித் கர் புர்கயஸ்தா, குமார் ஆகியோர் தர்ணாவில் மம்தாவுடன் அமர்ந்துள்ளார்கள். சாரதா சிட்பண்ட்ஸ் வழக்கில் தொடர்புடையவர்களை விசாரிக்கச் சென்ற சிபிஐ அதிகாரிகள் பணி செய்ய விடமாமல் தடுக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இவ்வாறு ஜவடேகர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x