Published : 04 Feb 2019 01:45 PM
Last Updated : 04 Feb 2019 01:45 PM

அசாம் ரயில் நிலையங்களில் மூட்டை மூட்டையாக வெடிபொருட்கள் பறிமுதல்

அசாம் மாநிலத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் இன்று அதிகாலை நடத்திய சோதனையின்போது பெரும் எண்ணிக்கையிலான வெடிகுண்டுப் பொருட்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இன்றுகாலை நடந்துள்ள இரண்டு சோதனைகள் குறித்து ரயில்வே போலீஸார் தெரிவித்த விவரம்:

அசாம் தலைநகர் கவுகாத்தி ரயில்நிலையத்தில் இன்று அதிகாலை 5.40 மணியளவில் வழக்கமான சோதனையில் போலீஸார் ஈடுபட்டனர். அப்போது பிளாட்பாரத்தில் 440 ஜெலட்டின் குச்சிகள், 700 டிடனேட்டர்களைக் கொண்ட ஒரு பை மற்றும் பியூஸ் வயர் அடங்கிய மூன்று மூட்டைகள் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.

இதேபோல ஜாகிரோடு ரயில் நிலையத்தில் காலை 7.05 மணியளவில் நடைபெற்ற சோதனையிலும் வெடிபொருட்கள் காணப்பட்டது. இந்நகரம் கவுகாத்தியிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

ரயில் நிலையத்திற்கு வந்து அசாம் - அவந்த் எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை செய்தபோது, அங்கு இரண்டு மூட்டைகளில் 160 ஜெலட்டின் குச்சிகள் ஒருபையிலும் 500 டெட்டனேட்டர்கள் இன்னொரு பையிலும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.

இவ்வாறு ரெயில் போலீஸார் தெரிவித்தனர்.

சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த வெடிபொருட்களை யார் விட்டுச்சென்றுள்ளனர் என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x