Last Updated : 04 Feb, 2019 01:02 PM

 

Published : 04 Feb 2019 01:02 PM
Last Updated : 04 Feb 2019 01:02 PM

மே.வங்க நிலவரம்; மக்களவையில் ராஜ்நாத் சிங் விளக்கம்: சிபிஐ அலுவலகத்தில் மத்தியப் படைகளை குவிக்க முடிவு

மேற்கு வங்க மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்து மாநில ஆளுநர் கேசரி நாத் திரிபாதியிடம் கேட்டறிந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மக்களவையில் இன்று விளக்கம் அளித்தார்.

கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகங்களுக்குப் பாதுகாப்பு தேவைப்படுகிறது என்பதால், மத்தியப் படைகளை குவிக்க முடிவு செய்ய அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

சாரதா சிட்பண்ட்ஸ் ஊழல் வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரணை நடத்திவருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் நேற்று விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் சென்றனர். ஆனால், அங்கு கொல்கத்தா போலீஸாருக்கும், சிபிஐ அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

சிபிஐ அதிகாரிகள் முறையான அனுமதியில்லாமல் வந்துள்ளார்கள் எனக் கூறி அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர் போலீஸார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இரவு முதல் கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் தர்ணா போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், மாநிலத்தில் நிலவும் சூழல், சட்டம் ஒழுங்கு குறித்து அறிய ஆளுநர் கேசரி நாத் திரிபாதி, மாநில தலைமைச் செயலாளருக்கும், போலீஸ் டிஜிபிக்கும் சம்மன் அனுப்பி நிலைமையைக் கேட்டறிந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே, சிபிஐ அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், " கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அதிகாரிகள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி பணியாற்ற அச்சப்படுகிறார்கள். மேலும், கொல்கத்தாவில் நிலவும் சூழலை மத்திய உள்துறை அமைச்சகம் தொடர்ந்து கூர்மையாகக் கண்காணித்து வருகிறது.

கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகங்களுக்கு மத்திய படைகளை பாதுகாப்புக்கு நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால், பொன்ஸி வழக்குகளை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு மிரட்டல்கள் தொடர்ந்து வருகின்றன. ஆதலால்,இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆளுநரிடம்  தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு மாநில நிலவரங்களைக் கேட்டறிந்தார். அப்போது, சிபிஐ அதிகாரிகள் போலீஸாரால் தாக்கப்பட்டது, கைது செய்யப்பட்டது, தடுக்கப்பட்டது துரதிருஷ்டமான விஷயம் என வேதனைத் தெரிவித்தார் " எனக் கூறினார்.

இதற்கிடையே மேற்கு வங்கத்தில் சிபிஐ அதிகாரிகள் செல்ல எதிர்ப்புத் தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, மே. வங்கத்தில் நிலவும் சூழல் குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.

அவர் கூறுகையில், "மே.வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதியிடம் மாநிலத்தில் நிலவும் சூழலைக் கேட்டறிந்தேன். தலைமைச் செயலாளர், போலீஸ் டிஜிபிக்கும் சம்மன் அனுப்பி விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படிதான் சிபிஐ அதிகாரிகள், பொன்ஸி ஊழல் வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வீட்டுக்கு விசாரணைக்குச் சென்றனர். இந்த வழக்கு தொடர்பாக பலமுறை போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமாருக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை " எனத் விளக்கம் அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x