Published : 22 Jan 2019 02:01 PM
Last Updated : 22 Jan 2019 02:01 PM
மாயாவதி குறித்து அவதூறாகப் பேசிய பாஜக பெண் எம்எல்ஏ சாதனாசிங்கின் தலையைக் கொண்டுவருபவர்களுக்கு ரூ.50 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என்று பிஎஸ்பி முன்னாள் எம் எல் ஏ விஜய் யாதவ் தெரிவித்துள்ளது அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் முகல்சராய் தொகுதியின் பாஜக எம்எல்ஏ சாதனா சிங். இவர் கடந்த சனிக்கிழமை அன்று நடந்த பேரணியில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, மாயாவதிக்கு சுயமரியாதையே இல்லை. பெண் இனத்துக்கே அவர் ஒரு கறை. அதிகாரத்துக்காகவும் வசதிக்காகவும் புறக்கணிப்புகளை விழுங்கியவர். அவர் ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை. மூன்றாம் பாலினத்தவர் போல உள்ளார் என்றும் திரவுபதியோடு ஒப்பிட்டும் பேசினார். இது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
அவரின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பகுஜன் சமாஜ் கட்சி இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தது. இதைத்தொடர்ந்து தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதாக சாதனா அறிக்கையொன்றை வெளியிட்டார்.
இதனிடையே அக்கட்சியின் முன்னாள் எம் எல் ஏ விஜய் யாதவ், சாதனாவின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ''சாதனா சிங் தன்னுடைய பேச்சுக்கு மாயாவதியிடமும், பொது மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இல்லையெனில் அவரின் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு, தொண்டர்களிடமிருந்து வசூலித்து ரூ.50 லட்சம் சன்மானம் அளிப்பேன்'' என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT