Published : 22 Jan 2019 11:35 AM
Last Updated : 22 Jan 2019 11:35 AM
கொல்கத்தாவில் 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு எதிராகத் திரண்டதை அடுத்து, மேற்கு வங்கத்தில் நடைபெறும் பல்வேறு பேரணிகளில் கலந்துகொள்கிறார் பிரதமர் மோடி.
மக்களவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதையொட்டி இப்போதே தேசிய, பிராந்திய அளவில் கூட்டணிகளை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் இணைந்து கூட்டணி அமைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தின் 80 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இந்தப் பின்னணியில் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவின் பிரிகேட் பேரேடு மைதானத்தில் கடந்த 19-ம் தேதி பிரம்மாண்ட மாநாடு நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்று பாஜக அரசை அகற்ற வேண்டும் என்று பேசினர். இது மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசியல் எழுச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் நடைபெறும் பல்வேறு பேரணிகளில் கலந்துகொள்கிறார் பிரதமர் மோடி.
இதுகுறித்து மேற்கு வங்க பாஜக வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிலிகுரியில் ஜனவரி 28-ம் தேதி நடைபெறும் பேரணியில் மோடி பங்கேற்கிறார். அதைத் தொடர்ந்து பொங்கானில் ஜனவரி 31-ம் தேதியும் அசான்சோலில் பிப்ரவரி 8-ம் தேதியும் கலந்துகொள்கிறார்.
அதேபோலே எதிர்க்கட்சிகள் ஒன்றுதிரண்ட பிரிகேட் பேரேடு மைதானத்திலும் ஃபிப். முதல் வாரத்தில் மோடி பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) மால்டா பகுதிக்கு வருகை தரும் பாஜக தலைவர் அமித் ஷா, அங்கு நடைபெறும் பேரணிக்குத் தலைமை தாங்குகிறார். நாளை (புதன்கிழமை) ஜார்காம் மற்றும் சுரி பகுதிகளில் இரண்டு பேரணிகளில் கலந்துகொள்கிறார்.
முன்னதாக அமித் ஷாவின் மால்டா பேரணியில் அமித் ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்க மம்தா அனுமதி மறுத்ததாகக் கூறப்பட்டது. பாதுகாப்புக் காரணங்களுக்காக அனுமதி அளிப்பது தாமதமானதாகவும் பாஜக தவறான தகவலை அளிப்பதாகவும் மம்தா குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT