Last Updated : 20 Jan, 2019 08:30 AM

 

Published : 20 Jan 2019 08:30 AM
Last Updated : 20 Jan 2019 08:30 AM

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சொகுசு விடுதியில் தங்க வைப்பு

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

அமைச்சர் பதவி கிடைக்காத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 20-க்கும் மேற்பட்டோர் அதிருப்தி அடைந்துள்ளனர். முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி தலைமையில் 5-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் பாஜகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே குமாரசாமி அரசுக்கு ஆதரவு அளித்த 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் தங்களது ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸார், பாஜக, 'ஆபரேஷன் தாமரை' மூலம் காங்கிரஸ் எம்எல்ஏ-க்களிடமும் குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டினர். இந்நிலையில், காங்கிரஸ் மேலிடம் தங்களது பலத்தைக் காட்ட நேற்று முன்தினம் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டத்தை கூட்டியது.

முன்னாள் முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தை ரமேஷ் ஜார்கிஹோளி, உமேஷ் ஜாதவ் உள்ளிட்ட 4 எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் மேலிடம், கட்சி தாவலை தடுக்கும் வகையில், தங்களது 75 எம்எல்ஏ-க்களை பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளது. அமைச்சர் டி.கே.சிவகுமார் கண்காணிப்பில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ஆபரேஷன் தாமரை என்ற பெயரில் பாஜக தலைவர்கள் காங்கிரஸ் எம்எல்ஏ-க்களிடம் ரூ.50 கோடி முதல் ரூ.70 கோடி வரை பேரம் பேசியுள்ளனர். அதற்கான ஆடியோ ஆதாரம் உள்ளது’’ என்றார். இந்நிலையில், கட்சி தாவுவதை தடுப்பதற்காக, கடந்த சில தினங்களாக ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த கர்நாடக‌ பாஜக எம்எல்ஏக்கள் 104 பேரும் நேற்று மாலை பெங்களூரு திரும்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x