Published : 08 Jan 2019 12:28 PM
Last Updated : 08 Jan 2019 12:28 PM
‘‘இடதுசாரிக் தொழிற்சங்கத்தினர் கடந்த 34 ஆண்டுகளாக முழுஅடைப்பு போராட்டம் நடத்தி மேற்குவங்க மாநிலத்தையே அழித்து விட்டார்கள், இனிமேல் பந்த் போராட்டமே கிடையாது’’ என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் இடதுசாரி தொழிற்சங்கங்கள் இன்று முதல் இரண்டு நாட்கள் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தன. அரசு நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கை, பணி நிரந்தரம், குறைந்தபட்ச சம்பள விகித உயர்வு, தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஐஎன்டியுசி, ஏஐடியுசி, எச்எம்எஸ், சிஐடியு உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் கூட்டாக இன்றும் நாளையும் முழுஅடைப்புப் போராட்டம் நடத்தி வருகின்றன.
அரசு ஊழியர்கள் வங்கி ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்கள், ஆட்டோ, பேருந்து உள்ளிட்ட வாகன தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இடதுசாரி தொழிற்சங்கங்கள் வலிமையாக உள்ள கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பெரிய அளவில் போராட்டம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் முழுஅடைப்புப் போராட்டத்துக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘முழு அடைப்புப் போராட்டத்தை பற்றி இனிமேல் ஒரு வார்த்தை நான் பேச மாட்டேன். மேற்குவங்கத்தில் முழுஅடைப்பு போராட்டத்தை ஆதரிப்பதில்லை என நாங்கள் முடிவெடுத்துள்ளோம். போதும், இது போதும். 34 ஆண்டுகளாக இடதுசாரிகள் பந்த் போராட்டம் நடத்தி மாநிலத்தையே அழித்து விட்டார்கள். மேற்குவங்கத்தை பொறுத்தவரை இனிமேல் பந்த் என்பதே கிடையாது’’ எனக் கூறினார்.
மேற்குவங்கத்தில் தொழிற்சங்கத்தினரின் முழு அடைப்பு போராட்டத்தை ஒடுக்க மாநில அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோல்கத்தா உள்ளிட்ட இடங்களில் இன்று மறியலில் ஈடுபட்ட இடதுசாரி தொழிற்சங்கத்தினருடன், ஆளும் திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மோதலில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்கள் இன்றும், நாளையும் விடுமுறை எடுக்க மாநில அரசு தடை விதித்துள்ளது. அரை நாள் விடுமுறை எடுத்தாலும் அரசு ஊழியர்கள் கடும் நடவடிக்கைக்கு ஆளாவார்கள் என மேற்கு வங்க அரசு எச்சரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT