Published : 04 Jan 2019 06:07 PM
Last Updated : 04 Jan 2019 06:07 PM

சபரிமலையில் இலங்கை பெண் வழிபட்டது உண்மை தான்: மீண்டும் உறுதி செய்தது கேரள காவல்துறை

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் இலங்கையைச் சேர்ந்த 46 வயது பெண் சசிகலா 18 படி ஏறிச் சென்று வழிபாடு நடத்தியது உண்மை தான் என அம்மாநில போலீஸார் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அனைத்து வயதுப்பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 3 மாத காலமாக கேரள மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள், பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 3.45 மணி அளவில் கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் நேற்று அதிகாலை சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

கோயிலுக்குள் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்ததால், கோயிலின் புனிதம், பாரம்பரியம் கெட்டுவிட்டதாக கூறி தந்திரி ராஜீவரரூ சுத்தி பூஜை நடத்தினார். பக்தர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு சுத்தி பூஜை நடத்தப்பட்டு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.

சபரிமலை கோயிலுக்குள் 50 வயதுக்கு குறைவான  பெண்களை போலீஸார் அழைத்துச் சென்றதற்கு பாஜக, காங்கிரஸ் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. கேரள அரசைக் கண்டித்து நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தில் பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.

இந்தநிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று இரவு சசிகலா என்ற 46 வயதுடைய இலங்கைப் பெண் தரிசனம் செய்தததாக தகவல்கள் வெளியானது. ஆனால், இதனை அவர் மறுத்தார்.

இது தொடர்பாக அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில் ‘‘நான் 48 நாட்கள் ஐயப்பனுக்கு விரதம் இருந்தேன். 18 படிகளில் ஏறினேன். அப்போது என்னை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் என்னால் சாமி தரிசனம் செய்ய முடியவில்லை. நான் உண்மையான ஐயப்ப பக்தை. என்னை ஏன் போலீஸார் தடுத்து நிறுத்தினர்" என்றார்.

ஆனால், சசிகலா 18 படிகளில் ஏறிச் சென்று ஐயப்பனை தரிசனம் செய்ததாக கேரள போலீஸார் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளனர்.

இதுகுறித்து ‘தி இந்து’ ஆங்கிலத்திடம் அதிகாரிகள் கூறுகையில் ‘‘சசிகலா ஐயப்பன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்திய வீடியோ ஆதாரம் போலீஸார் வசம் உள்ளது. கோயில் வழிபாடு மற்றும் மதநம்பிக்கை தனி மனிதர்கள் சார்ந்தது என்பதால் போலீஸார் அதனை வெளியிடவில்லை. இருப்பினும் தேவைப்பட்டால் அதனை நீதிமன்றத்தில் சமர்பிக்க தயாராக உள்ளனர்’’ என தெரிவித்தனர்.

சசிகலாவிடம் இலங்கை பாஸ்போர்ட் இருந்தது என்றும், அந்த பாஸ்போர்ட்டில் அவரது பிறந்த தேதி 1972, டிசம்பர் 3-ம் தேதி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது என்றும் போலீஸார் முன்னதாக தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x