Last Updated : 02 Jan, 2019 09:54 AM

 

Published : 02 Jan 2019 09:54 AM
Last Updated : 02 Jan 2019 09:54 AM

சபரிமலையில் இரு இளம்பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் அதிகாலையில் ஐயப்பனை தரிசித்தனர்

சபரிமலையில் இன்று அதிகாலையில் 40 வயதுகளில் உள்ள இரு இளம்பெண்கள் போலீஸார் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து திரும்பினர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இந்தத் தீர்ப்புக்கு இந்து அமைப்புகள், பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், சபரிமலையில் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதைத் தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு போடப்பட்டு, போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த மாதம் திருநங்கைகள் 4 பேர் சபரிமலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய முயன்றபோது போலீஸாரால் தடுக்கப்பட்டனர். அதன்பின் மறுநாள் உயர் நீதிமன்ற குழுவினர் முறையிட்டதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் திருநங்கைகள் 4 பேரும் சாமி தரிசனம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, சென்னையைச் சேர்ந்த 'மனிதி' எனும் பெண்கள் நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி தலைமையில் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் 11 பேர் சபரிமலைக்கு நேற்று சென்றனர். ஆனால் பக்தர்களின் கடும் எதிர்ப்பால் அவர்கள் திரும்பினார்கள்.

இந்நிலையில், 21 நாள் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பலத்த பாதுகாப்புக்கு இடையே கடந்த 30-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. கோயிலில் மகர விளக்கு பூஜை வரும் ஜனவரி 14-ம் தேதி நடைபெறவுள்ளது. ஜனவரி 20-ம் தேதி கோயில் நடை சாத்தப்படுகிறது.

இதனிடையே, சபரிமலையில் அமல்படுத்தப்பட்டிருக்கும் தடை உத்தரவை ஜனவரி 5-ம் தேதி வரை கேரள அரசு நீட்டித்துள்ளது.

இந்த சூழலில் இன்று அதிகாலை 3.45 மணி அளவில் கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் இன்று அதிகாலை சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இவர்கள் இருவரும் ஏற்கெனவே கடந்த மாதம் 24-ம் தேதி சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க போலீஸ் பாதுகாப்புடன் சென்றனர். ஆனால், பிந்து, கனகதுர்காவுக்கு 40 வயதே ஆனதால் பக்தர்களின் கடும் எதிர்ப்பால் இருவரும் கீழே இறக்கப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது சபரிமலை சென்றுவந்தது குறித்துப் பிந்து தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ நாங்கள் 2-வது முறையாக சபரிமலைக்கு வந்துள்ளோம். ஆனால், இந்த முறை ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டுத் திரும்பி இருக்கிறோம். நாங்கள் தரிசனம் செய்ய போலீஸார் உதவினார்கள். அதிகாலை 1.30 மணிக்கு பம்பைக்கு வந்தோம், அதன்பின் அங்கிருந்து எங்களை போலீஸார் சபரிமலைக்கு அழைத்துச் சென்றனர்.

சபரிமலையில் அனைத்துப் பக்தர்களும் செல்லும் 18 படிகள் வழியாகச் செல்லாமல், பின்புறம் உள்ள, விஐபிக்கள் செல்லும் பகுதி வழியாக அதிகாலை 3.30 மணிக்குச் சென்றோம். நாங்கள் செல்லும் போது அதிகமான எதிர்ப்பு ஏதும் இல்லை. குறைவான அளவுள்ள பக்தர்களே சரண கோஷம் போட்டு எங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், நாங்கள் பாதுகாப்புடன் ஐயப்பனைத் தரிசனம் செய்தி திரும்பினோம்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x