Last Updated : 30 Dec, 2018 09:15 AM

 

Published : 30 Dec 2018 09:15 AM
Last Updated : 30 Dec 2018 09:15 AM

2019 மக்களவைத் தேர்தலில் கூட்டணி சேர அதிமுகவை வலியுறுத்தும் பாஜக?- எதிர்க்கும் எம்.பி.க்கள்; ஆதரிக்கும் அமைச்சர்கள்

எதிர்வரும் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தங்களுடன் கூட்டணி அமைக்குமாறு அதிமுகவை பாஜக வலியுறுத்தி வருவதாக தெரிகிறது. இந்தக் கூட்டணிக்கு அதிமுக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், அக்கட்சியின் அமைச்சர்கள் ஆதரவு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

2014 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள மொத்த 39 தொகுதிகளில் பாஜக ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. அதனுடன் கூட்டணி அமைத்த பாமகவும் ஒரு தொகுதியை கைப்பற்றியது.

இந்நிலையில், 2019 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவதில் பாஜக தீவிரம் காட்டுகிறது. இதற்காக, அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக விரும்புகிறது. இதில், அதிமுகவுக்கு விருப்பம் இல்லை என்றாலும், கூட்டணிக்கு பாஜக வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. மேலும், இதன் பொருட்டு, நாட்டின் உயரிய பதவியில் இருக்கும் ஒருவர், பாஜகவுக்காக பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஓய்வுக்கு பிறகும், பாஜகவால் பதவி கிடைக்கப் பெற்ற அந்த நபர், அதிமுகவுடன் நெருங்கிய நட்புறவு கொண்டவர். இவர் மூலமாக, இரு கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் அதிமுக எம்பிக்கள் வட்டாரம் கூறும்போது, ‘மத்திய அரசால் தங்களுக்கு ஏற்படும் பல்வேறு நெருக்கடி காரணமாக, அதிமுக அமைச்சர்கள் இந்தக் கூட்டணியை ஆதரிக்கின்றனர். ஆனால், நாங்கள் (அதிமுக எம்.பி.க்கள்) இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். டிசம்பரில் கூட வேண்டிய பொதுக்குழுவில் இந்த பிரச்சனையை எழுப்புவோம் என்பதால் அதனை பிப்ரவரிக்கு தள்ளிவைக்க எங்கள் தலைமை திட்டமிடுகிறது’ எனத் தெரிவித்தன.

பாஜகவின் திட்டப்படி, தமக்கு 20 தொகுதிகளை அளிக்குமாறு அதிமுகவிடம் வலியுறுத்துகிறது. இந்த 20 தொகுதிகளில் சிலவற்றை, தம் கூட்டணியில் சேர்க்கத் திட்டமிடும் பாமக, தேமுதிக மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு பாஜக பிரித்து அளிக்கும். இந்த இருபது தொகுதிகளின் பெயர்கள், அதிமுக தலைமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில், அதிமுக சார்பில் ஒரு லட்சம் முதல் இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகளான திருவள்ளூர், தேனி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், மத்திய சென்னை, வட சென்னை உள்ளிட்ட தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் பாஜக நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘கடைசிநேரத்தில் ரஜினி வந்தால் அவரையும் சேர்க்க எங்கள் தொகுதிகளில் சிலவற்றை விட்டுக்கொடுப்போம். கூட்டணி இன்றி எந்த கட்சி போட்டியிட்டாலும் வாக்குகள் சிதறும். இதை தவிர்க்கவே தினகரன் அணியையும் அதிமுகவுடன் இணைத்து இருமுனைப் போட்டியை உருவாக்குவது எங்கள் திட்டம்’ எனத் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x