Last Updated : 26 Dec, 2018 09:57 AM

 

Published : 26 Dec 2018 09:57 AM
Last Updated : 26 Dec 2018 09:57 AM

ஏழைப் பெண்களுக்கு இலவசமாக 15 ஆயிரம் பிரசவங்கள் செய்த நரசம்மா காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்

கர்நாடக மாநிலத்தில் கிராமங்களில் உள்ள ஏழைப் பெண்களுக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரசவங்கள் பார்த்தவரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான 'சுலகிட்டி' நரசம்மா நேற்று காலமானார். அவருக்கு வயது 98.

சுலகிட்டி நரசம்மா மறைவுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து தனது வேதனையைப் பகிர்ந்துள்ளார். நரசம்மாவுக்கு கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருது வழங்கிக் கவுரவித்தார்.

கடந்த 1920-ம் ஆண்டு கர்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், கிருஷ்ணாபுரம், பவகாடா பகுதியில் பிறந்தார் நரசம்மா. கல்வியறிவு இல்லாத நரசம்மாவுக்கு, 12 வயதில் திருமணமாகி, 12 பிள்ளைகள் பிறந்தன.அதில் 4 பேர் இறந்துவிட்டனர்.

கடந்த 1940-ம் ஆண்டில் பிரசவம் பார்க்கும் முறையைத் தனது பாட்டியிடம் இருந்து அறிந்துள்ளார் நரசம்மா. தனது உறவினர் ஒருவருக்கு தனது பாட்டி பிரசவம் பார்த்தபோது அவருக்கு உதவியாக நரசம்மா இருந்தார். அப்போது அவரிடம் இருந்து பிரசவம் பார்க்கும் வைத்தியத்தை நரசம்மா கற்றார். தனது 20 வயதில் இருந்து ஏழைப் பெண்களுக்கு பிரசவம் பார்த்து வந்தார் நரசம்மா.

மருத்துவ வசதிகள் சென்று சேராத கிராமங்களில் நரசம்மாவின் அனுபவமான பிரசவமுறை ஏராளமான பெண்களையும், குழந்தைகளையும் காப்பாற்றியுள்ளது. இதனால், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நரசம்மாவின் பெயர் பரவி அவர் புகழ்பெறத் தொடங்கினார். போக்குவரத்து வசதிகள் இல்லாத பகுதிகளில் நடந்தே சென்று ஏழை பெண்களுக்கு பிரசவம் பார்த்து பணம் ஏதும் வாங்காமல் இலவசமாகவே இந்த சேவையைச் செய்துவந்தார் நரசம்மா.

வயிற்றில் இருக்கும் குழந்தையின் தன்மை, தாய், குழந்தை என்ன உணவு உண்ணலாம், நோய் எதிர்ப்பு மருந்து ஆகியவற்றைப் பாரம்பரிய மருத்துவ முறைப்படி ஆலோசனைகளை நரசம்மா வழங்கி வந்தார். இதனால், கன்னட மொழியில் 'சுலாகிட்டி'(மருத்துவச்சி) நரசம்மா என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டார்.

தனது 70 ஆண்டுகால மருத்துவசேவையில் ஏறக்குறைய 15 ஆயிரம் ஏழைப் பெண்களுக்கு இலவசமாகப் பிரசவம் பார்த்துள்ளார் நரசம்மா.

இந்நிலையில் முதுமை காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நுரையீரல் தொடர்பான நோயால் கடந்த 5 நாட்களுக்கு முன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நரசம்மா சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலமானார்.

 

நரசம்மாவின் சேவையைப் பாராட்டி கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு பத்மசிறீ விருது வழங்கி கவுரவித்தது. கடந்த 2014-ம் ஆண்டு தும்கூரு பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி மரியாதை செய்தது. மேலும், கடந்த 2013-ம் ஆண்டு வயோசிரேஸ்தா சம்மன் விருது, கன்னட ரஜயோஸ்தல் விருது, 2012-ம் ஆண்டு டி தேவராஜ் உர்ஸ் விருது, கிட்டூர் ராணி சென்னார்ங் விருது, முருகா மடத்தின் சார்பில் முருகா ஸ்ரீவிருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் நரசம்மாவின் சேவைக்காக வழங்கப்பட்டுள்ளன.

நரசம்மா மறைவு செய்தி அறிந்ததும், பெங்களூரு மருத்துவமனைக்கே சென்று முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா அஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ சுலாகிட்டி நரசம்மா மறைவு செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். கர்நாடகாவில் ஏழை பெண்களுக்கு இவர் ஆற்றிய சேவைகள் என்றென்றும் நினைவில் கொள்ளத்தக்கது. ஏழைகள் மீது எப்போதும் இரக்கம், கரிசனம் கொண்டவராக நரசம்மா இருந்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், சார்ந்தஉறவினர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x