Published : 24 Dec 2018 06:02 PM
Last Updated : 24 Dec 2018 06:02 PM

அயோத்தியில் பாலியல் தொழிலாளர்களுக்கு ராமர் கதை சொற்பொழிவு; சர்ச்சையில் ஆன்மிக தலைவர்

பாலியல் தொழிலாளர்களை அயோத்திக்கு அழைத்துச் சென்று ஆன்மிக தலைவர் மொராரி பாபு, 'ராமர் கதை'யை சொற்பொழிவாற்றிய நிகழ்ச்சி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

பிரபல ஆன்மிக தலைவர் மொராரி பாபு, மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதியில் இருந்து பாலியல் தொழிலாளர்களை அயோத்திக்கு அழைத்துச் சென்று, 'ராமர் கதை'யை சொற்பொழிவாற்றினார். இதனால் அயோத்தி நகரமே சீர்குலைந்துவிட்டதாக அயோத்தி நகரத்தினர் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

இதுகுறித்து தர்ம சேனாவின் தலைவரும் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருமான சந்தோஷ் துபே கூறும்போது, ''மொராரி பாபுவின் செயல், புனிதமான இந்த அயோத்தியை நிந்தனைக்கு ஆளாக்கிவிட்டது. ஒருவேளை சமூகத்தை சீர்திருத்த அவர் விரும்பினால், நக்சலைட்டுகள் நிறைந்த பகுதிகளுக்கும், சிவப்பு விளக்குப் பகுதிகளுக்கும் சென்று அவர் ராமர் கதை நிகழ்வை ஆற்றட்டும்'' என்றார்.

 

அயோத்தியில் உள்ள தாண்டியா கோயிலின் தலைமை பூசாரி பாரத் வியாஸ், ''கடவுள் ராமரின் நகரத்தில் பாலியல் தொழிலாளர்கள் கூடுவது நல்ல செய்தி அல்ல. இந்த இடத்தில் பக்தர்கள் வந்து தங்களின் பாவங்களைக் கழுவிச் செல்கின்றனர். மொராரி பாபுவின் இந்தச் செயலை நாங்கள் கடுமையான எதிர்க்கிறோம்'' என்றார்.

 

இதுபற்றிப் பேசிய உள்ளூர் இந்து அமைப்பின் தலைவர் பிரவீன் சர்மா, மொராரிக்கு எதிராக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்குக் கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவித்தார்.

 

மொராரி பதிலடி

சர்ச்சைகளுக்குப் பதிலளித்த மொராரி, ''துளசிதாசர் எழுதிய ராமாயணத்தில் பாலியல் தொழிலாளர்கள் பற்றி எழுதியுள்ளார். சமூகத்தின் பின் தங்கிய பகுதிகளில் கவனம் செலுத்த உள்ளேன். ராமரின் வாழ்க்கையே அதை அடிப்படையாகக் கொண்டதுதான்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x