Last Updated : 15 Dec, 2018 03:36 PM

 

Published : 15 Dec 2018 03:36 PM
Last Updated : 15 Dec 2018 03:36 PM

புதிய திருப்பம்: ரஃபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் பொய்யான தகவல்; மத்திய அரசு மீது மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

ரஃபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் பொய்யான விவரங்களை அளித்து, தவறாக வழிநடத்திவிட்டது மத்திய அரசு என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த எம்.பி.யுமான மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி, தலைமை வழக்கறிஞர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி பொது கணக்குக்ககுழு விசாரிக்கும் என்று கார்கே தெரிவித்தார்.

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் 36 ரஃபேல் போர் விமானங்களை மத்திய அரசு வாங்கும் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

இதுதொடர்பாக நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணை செய்தது. அதில், ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு செய்துள்ள ஒப்பந்தத்தில் எந்தவிதமான முறைகேடுகளும் நடந்ததற்கான முகாந்திரம் இல்லை என்று தெரிவித்து அந்த மனுக்களைத் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், ரஃபேல் போர் விமானங்கள் குறித்த விவரங்கள், விலை ஆகியவற்றை மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியிடம் தெரிவித்து அவர் ஆய்வு செய்தபின், நாடாளுமன்ற பொதுக்கணக்குழுவும் ஆய்வு செய்துவிட்டது. இப்போது நாடாளுமன்றத்தில் அனுமதிக்காகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.

ஆனால், நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழுவுக்கு இதுவரை மத்திய அரசு ரஃபேல் போர் விமானங்கள் குறித்த விவரங்களை அளிக்கவில்லை என்று பொதுக்கணக்குக் குழுவின் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்.பி.யும், பொதுக்கணக்குக்குழுவின் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் நிருபர்களிடம் இன்று கூறியதாவது:

ரஃபேல் போர்விமானங்கள் குறித்த உண்மையான தகவல்களை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவிக்கவில்லை. மாறாகப் பொய்யான விவரங்களைத் தாக்கல் செய்துள்ளது.

மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியிடம் ரஃபேல் போர் விமானம் குறித்த விலை விவரங்கள், ஒப்பந்த விவரம் ஆகியவற்றை அளித்துவிட்டதாகவும், அவர் ஆய்வு செய்துவிட்டதாகவும், அந்த அறிக்கையை பொதுக் கணக்குகுழுவும் ஆய்வு செய்துவிட்டதாகவும், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதாகவும் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், இவை அனைத்தும் பொய்யாகும். நாடாளுமன்றத்தில் சிஏஜியின் அறிக்கையையும், பொதுக்கணக்கு குழுவின் அறிக்கையையும் எப்போது மத்திய அரசு தாக்கல் செய்தது. பொதுக்கணக்குக் குழு ரஃபேல் விலை குறித்த அறிக்கையை ஆய்வு செய்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நான்தான் பொதுக்கணக்குகுழுவின் தலைவர் எனக்குத் தெரியாமல் யார் ஆய்வு செய்தது.

அந்த அறிக்கையும் வெளிப்படையாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. யாரேனும் ரஃபேல் விமானம் விலை விவரங்கள் குறித்த மத்தியஅரசின் அறிக்கையைப் படித்தீர்களா, பார்த்திருக்கிறீர்கள். நான் இந்த விவகாரத்தை பொதுக்கணக்கு குழுவின் மற்ற உறுப்பினர்களிடம் எடுத்துச் செல்ல இருக்கிறேன்.

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரையும், மத்திய தலைமை தணிக்கை அதிகாரியையும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று பொதுக்கணக்கு குழுவின் உறுப்பினர்களிடம் கோரிக்கை வைக்கப்படும். எப்போது பொதுக்கணக்கு குழுவிடம் அறிக்கை தாக்கல் செய்தீர்கள்?, எப்போது அறிக்கையை நீங்கள் ஆய்வு செய்தீர்கள்?, பொது கணக்குக் குழுவிடம் எப்போது தாக்கல் செய்தீர்கள்?, தாக்கல் செய்ததற்கான ஆதாரம் என்ன இருக்கிறது?, நாடாளுமன்றத்தில் எப்போது தாக்கல் செய்யப்பட்டது? போன்ற கேள்விகளை எழுப்ப வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தில் இதுபோன்ற பொய்யான விவரங்களைக் கூறி மத்திய அரசு தவறாக வழிநடத்தியதற்கு மன்னிப்பு கோர வேண்டும்.

நாடாளுமன்றத்தில் இதுவரை ரஃபேர் போர்விமானங்கள் குறித்த அறிக்கையை மத்திய அரசுதாக்கல் செய்யவில்லை. உச்சநீதிமன்றத்திலோ, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு தான் இந்த விவகாரத்தை விசாரிக்க முடியும்

இவ்வாறு கார்கே தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x