Last Updated : 14 Dec, 2018 02:09 PM

 

Published : 14 Dec 2018 02:09 PM
Last Updated : 14 Dec 2018 02:09 PM

ரஃபேல் தீர்ப்பு: ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் - ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

சர்வதேச அளவில் ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடு இருப்பதாகப் பேசி, இந்தியாவின் தோற்றத்தை சிதைத்துவிட்டார் ராகுல் காந்தி, அதற்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரஃபேல் விமானங்களை வாங்க ஆலோசிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் அதிகமாக ரூ.58 ஆயிரம் கோடிக்கு விலை வழங்கப்பட்டுள்ளதாகவும்; விமான உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கான ரூ.30,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில், ரஃபேல் ஒப்பந்த முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்ற பொதுநல மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில்,” ரஃபேல் போர் விமானக் கொள்முதலில் எந்தவிதமான சந்தேகத்துக்கு இடமான விவரங்களும் இல்லை. ஆதலால், விமானக் கொள்முதலுக்கு தடையில்லை” என்று தீர்ப்பளித்தது.

இந்நிலையில், இந்தத்தீர்ப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் நிருபர்களிடம் இன்று கூறுகையில், “ அரசியல் ஆதாயத்துக்காக ரஃபேல் போர் விமானக் கொள்முதலில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் கட்சியினர் மத்தியஅரசு மீது குற்றம்சாட்டினார்கள். நாட்டையே திசைதிருப்ப முயற்சித்தார்கள், சர்வதேச அளவில் தேசத்தின் தோற்றத்தைச் சிதைத்தார்கள்.

காங்கிரஸ் மீது ஏதேனும் ஊழல் குற்றச்சாட்டு இருந்தால், அதற்குப் பதிலாக பாஜக மீதும் போட்டியாக ஏதாவது குற்றச்சாட்டைக் கூறுகிறது. ரஃபேல் போர்விமானக் கொள்முதலில் காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் தேசத்தின் தோற்றத்தைச் சிதைக்க கூறப்பட்டவை. காங்கிரஸ் கட்சியின் தலைவர் நாடாளுமன்றத்துக்கு வந்து,  தான் கூறிய குற்றச்சாட்டுக்கும், கட்சியினர் கூறியதற்கும் மன்னிப்பு கோர வேண்டும் “ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x