Published : 13 Dec 2018 12:51 PM
Last Updated : 13 Dec 2018 12:51 PM

மெகுல் சோக்சிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ்: இண்டர்போல் பிறப்பித்தது

வங்கிகளில் முறைகேடாக கடன் பெற்று வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நீரவ் மோடியின் நெருங்கிய உறவினர் மெகுல் சோக்சிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸை இண்டர்போல் இன்று பிறப்பித்துள்ளது.

மும்பை வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது நெருங்கிய உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.13 ஆயிரம் கோடி சட்ட விரோத பண பரிமாற்ற மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீரவ் மோடிக்கு சொந்தமான 3000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. அவரது பாஸ்போர்ட்டுகளும் முடக்கப்பட்டன.

ஆனால், இந்த மோசடி வெளியுலகுக்கு தெரிய வருவதற்கு முன்பாகவே வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்ட நீரவ் மோடி, வெவ்வேறு பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி பல நாடுகளுக்கு பயணம் செய்து வருகிறார். இதைத்தொடர்ந்து, நீரவ் மோடிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. மேலும் உலகம் முழுவதும் உள்ள அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டு அவரை இந்தியா கொண்டு வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே இந்திய வங்கிகளில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற மெகுல் சோக்சிக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட்டை முடக்கி அவர் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்யும் உத்தரவை பெறுவதற்கான சர்வதேச நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி மெகுல் சோக்சியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. சிபிஐ வேண்டுகோளை ஏற்று இண்டர்போல் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் அவர் எந்தநாட்டில் இருந்தாலும் அவரை கைது செய்து ஒப்படைக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x