Published : 11 Dec 2018 03:19 PM
Last Updated : 11 Dec 2018 03:19 PM
5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு தெளிவான செய்தியை உணர்த்தி இருக்கிறது என்று சிவசேனா கட்சியின் செய்தித் தொடர்பாளரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் பாஜக ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் அந்த கட்சி மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. சத்தீஸ்கரிலும், ராஜஸ்தானிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் சூழல் நிலவியுள்ளது.
இது குறித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
சிவசேனா கட்சியின் செய்தித்தொடர்பாளரும், எம்.பியுமான சஞ்சய் ராவத் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறுகையில், “ 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு தெளிவான பாடத்தை உணர்த்திவிட்டது. இனிமேலாவது, ஆளும் கூட்டணிக்கு குறித்து பாஜகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரத்தை உணர்த்தி இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
சந்திரபாபு நாயுடு பேட்டி
தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. தெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சி 2-வது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது.
இந்நிலையில், தெலங்கானா தேர்தல் முடிவு குறித்து ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஹைதராபாத்தில் நிருபர்களிடம் கூறுகையில், “ தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சி வெற்றிக்கான காரணங்களையும், காங்கிரஸ், தெலங்கு தேசம் கூட்டணியின் தோல்விக்கான காரணங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். இன்னும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம் என எதிர்பார்த்தோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு இடங்கள் கிடைக்கவில்லை” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT