Last Updated : 11 Dec, 2018 01:06 PM

 

Published : 11 Dec 2018 01:06 PM
Last Updated : 11 Dec 2018 01:06 PM

வாக்கு இயந்திரங்களின் மீதான புகார் குறையும்: மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கருத்து

வாக்கு இயந்திரங்கள் மீதான புகார்கள் குறையும் என மத்திய சிறுபான்மைத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கருத்து கூறியுள்ளார்.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து வாக்கு இயந்திரங்கள் மீது புகார் கூறி வருகின்றன. இது, கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்தது முதல் தொடர்ந்து வருகிறது.

தற்போது வெளியாகி வரும் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளிலும் இந்தப் புகார் எழுந்தது. ஆனால், மிசோராம், தெலங்கானா, சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜகவிற்கு தோல்வி முகம் தெரிகிறது. இதனால், வாக்கு இயந்திரங்கள் மீதான புகார்கள் இந்த முறை முடிவுகளுக்குப் பின் எழவில்லை. இந்தவகை புகார்கள் மீது மத்திய சிறுபான்மைத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கருத்து கூறியுள்ளார்.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்திடம் முக்தார் அப்பாஸ் கூறும்போது, ''பிரதமராக நரேந்திர மோடி வந்தது முதல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வாக்கு இயந்திரங்கள் மீது புகார் கூறத் தொடங்கின. 2014 மக்களவைத் தேர்தலுக்குப் பின் வந்த மாநில சட்டப்பேரவை தேர்தல்களிலும் இதைத் தொடர்ந்தனர். இந்தமுறை அதுபோன்ற புகார்கள் குறைந்துள்ளன'' எனத் தெரிவித்தார்.

இந்தமுறை ம.பி. மாநில தேர்தலில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையிம் சிசிடிவி கேமராக்கள் சுமார் ஒன்றரை மணிநேரம் வேலை செய்யவில்லை. இது அம்மாநிலத்தில் ஆளும் பாஜகவின் சதி எனப் புகார் எழுந்தது.

ராஜஸ்தானின் ஒரு தொகுதியிலும் சாலை ஓரத்தில் ஒரு வாக்கு இயந்திரம் கேட்பாரற்றுக் கிடந்தது. இதற்காக இரு தேர்தல் அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதன் விசாரணையில் அந்த இயந்திரம் கூடுதல் தேவைக்காக வைக்கப்பட்டது எனவும், அதைக் கொண்டு செல்லும் வழியில் சாலையில் விழுந்து விட்டதாகவும் தகவல் தெரியவந்தது.

இதுபோன்ற காரணங்களாலும், ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை வாக்கு இயந்திரங்கள் மீது எதிர்க்கட்சிகள் புகார் கூறி வந்தனர். வாக்குப்பதிவு முடிந்து அவை பாதுகாத்து வைக்கப்பட்ட இடங்களில் முன்பாக காங்கிரஸ் கட்சியினர் இரவு, பகலாக அமர்ந்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x