Published : 11 Dec 2018 07:46 AM
Last Updated : 11 Dec 2018 07:46 AM
புனேவைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவிகள் சிலர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், ‘‘டெல்லியில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுதீன் தர்காவில் பெண்களை அனுமதிக்க மறுக்கின்றனர். தர்காவுக்கு வெளியே, ‘பெண்களுக்கு அனுமதி இல்லை’ என்று ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் எழுதப்பட்ட அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். ஹஸ்ரத் நிஜாமுதீன் தர்கா ஒரு பொதுவான வழிபாட்டு இடம். அங்கு பெண்களை அனுமதிக்க மறுப்பது பாலின ரீதியான பாகுபாடு என்பதோடு, அரசியல் சாசனத்துக்கும் எதிரானது. முஸ்லிம்களின் இரண்டு பெரிய வழிபாட்டு தலங்களான மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்காவிலும், அஜ்மீரில் உள்ள க்வாஜா மொய்னுதீன் தர்காவிலும் பெண்களை அனுமதிக்கின்றனர். ஹஸ்ரத் நிஜாமுதீன் தர்காவிலும் பெண்களை அனுமதிக்க வேண் டும். பெண்கள் நுழைவதற்கு எதிரான தடையை நீக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே.ராவ் கொண்ட பெஞ்ச் நேற்று விசாரித்தது. ஹஸ்ரத் நிஜாமுதீன் தர்காவில் பெண்களை ஏன் அனுமதிக்கக் கூடாது? என்று விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கும் டெல்லி மாநில அரசுக்கும் ஹஸ்ரத் நிஜாமுதீன் தர்கா அறக்கட்டளைக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மறு சீராய்வு மனு மீதான தீர்ப்புக்காக தாங்கள் காத்திருப்பதாகக் கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT