Published : 11 Dec 2018 07:44 AM
Last Updated : 11 Dec 2018 07:44 AM
பொதுமக்கள் நலனுக்காக நாடாளுமன்ற அவை நடவடிக்கை கள் சுமுகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
நாடாளுமன்றத்தின் குளிர் காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கவுள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி கூட்டியிருந்தார்.
கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது தொடர்பாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நிருபர்களிடம் கூறியதாவது:
நாட்டில் உள்ள அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக எதிர்க்கட்சிகளிடம் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
அதே நேரத்தில் மக்களவை, மாநிலங்களவை என இரு அவை களின் நடவடிக்கைகளும் சுமுகமாக நடைபெறுவதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். பொதுமக்கள் நலனுக்காக அனைத்து முக்கிய பிரச்சினைகள் குறித்தும் பேசுவதற்கு அரசு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அவைக்கு உள்ளேயும் சரி, அவைக்கு வெளியேயும் சரி அரசு இதுதொடர்பாக விவாதிக்க திறந்த மனதுடன் உள்ளது என்றும் பிரதமர் உறுதியளித்தார்.
எனவே, பொதுமக்கள் நலனுக் காக அரசு, எதிர்க்கட்சிகள் இரண்டும் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்புடன் செயல்படவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்த குளிர்காலக் கூட்டத் தொடரின்போது பட்ஜெட் துணை மானியக் கோரிக்கை விவாதமும் நடைபெறவுள்ளது. இந்த துணை மானியக் கோரிக்கைக்கு நாடாளு மன்ற அவைகள் ஒப்புதல் அளித்தால்தான் அதை அமல் படுத்த முடியும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
இவ்வாறு தோமர் தெரிவித்தார்.
கூட்டத்துக்குப் பிறகு மாநிலங் களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆஸாத் கூறும்போது, “ரஃபேல் போர் விமான விவகாரம், சிபிஐ உள்ளிட்ட விசாரணைகளை தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விசாரிக்க கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைக்க வேண்டும் என நாங்கள் கூட்டத்தில் பிரதமரிடம் வலியுறுத் தினோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT