Published : 11 Dec 2018 07:37 AM
Last Updated : 11 Dec 2018 07:37 AM

சபரிமலையில் தடையுத்தரவை வாபஸ் பெறக் கோரி கேரளாவில் நடந்த பாஜக பேரணியில் போலீஸார் மீது கல்வீச்சு

சபரிமலையில் தடையுத்தரவை வாபஸ் பெறக் கோரி கேரளாவில் நேற்று பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணி வன்முறையில் முடிந்தது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பரில் தீர்ப்பு வழங்கியது. இந்த உத்தரவை அமல்படுத்த கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு முயற்சி செய்து வருகிறது. இதையடுத்து கோயிலுக்கு 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் வந்த

தால், அவர்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து திருப்பியனுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் சபரிமலையில் அமல்படுத்தப்பட்டுள்ள 144 தடையுத்தரவை வாபஸ் பெறக் கோரி பாஜக நிர்வாகி ஏ.என்.ராதாகிருஷ்ணன் என்பவர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி்யுள்ளார். அவரது போராட்டம் நேற்றுடன் 7-வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில் நேற்று அவரை மத்திய இணை அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம், சந்தித்துப் பேசினார்.

இதனிடையே அவரது உயிரைக் காப்பாற்றக் கோரி பாஜகவினர் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள கேரள மாநில தலைமைச் செயலகம் நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தினர். அப்போது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் பேரணியை போலீஸார் கலைத்தனர். இதனால் பேரணியில் பங்கேற்றவர்கள் சிதறி ஓடினர். சிலர் அங்கிருந்தபடியே போலீஸார் மீது கல்வீசித் தாக்கினர். இதனால் பேரணி வன்முறையில் முடிந்தது. இதில் சிலர் காயமடைந்தனர்.சிறிது நேரம் கழித்து சிதறி ஓடியவர்கள் பின்னர் ஒன்று சேர்ந்து சாலையில் அமர்ந்து போலீஸாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

கடை அடைப்பு

இந்த நிலையில் பாஜக பேரணியில் கலந்துகொண்டவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை போலீஸார் வீசியதைக் கண்டித்து இன்று திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஒரு நாள் கடையடைப்புக்கு பாஜகவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

பேரவை ஒத்திவைப்பு

சபரிமலை விவகாரம் தொடர்பாக நேற்று கேரள சட்டப் பேரவை தொடர்ச்சியாக 6-வது நாளாக ஒத்திவைக்கப்பட்டது. சபரிமலை பிரச்சினை தொடர்பாக நேற்று 6-வது நாளாக பேரவையின் மையப்பகுதிக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வந்து அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் - குழப்பம் ஏற்பட்டு 6-வது நாளாக அவை ஒத்திவைக்கப்பட்டது. நேற்று அவை 23 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றது. சபரிமலையில் 144 தடையுத்தரவை வாபஸ் பெறவேண்டும் என்ற கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டையையும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையில் வைத்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x