Published : 10 Dec 2018 12:06 PM
Last Updated : 10 Dec 2018 12:06 PM
டெல்லி சென்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை இன்று சந்தித்து பேசினார். கருணாநிதி சிலை திறப்பு விழா அழைப்பிதழையும் அப்போது நேரில் வழங்கினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதியின் சிலை வரும் 16-ம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியால் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் டெல்லி சென்ற மு.க.ஸ்டாலின் நேற்று சோனியா காந்தியின் இல்லத்துக்கு நேரில் சென்று, சிலை திறப்பு விழா அழைப்பிதழினை அவரிடம் அளித்தார்.
அத்துடன், சோனியா காந்தியின் பிறந்த நாளினை முன்னிட்டு, அவருக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து அளித்து பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டார். அப்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., கனிமொழி, எம்.பி., திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.இராசா, ஆகியோர் உடனிருந்தனர்.
டெல்லியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களைச் ஸ்டாலின் சந்தித்துப் பேசுகிறார். இன்று நடைபெறவுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
முன்னதாக இன்று காலை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை ஸ்டாலின் சந்தித்தார். அப்போது, சென்னையில் நடைபெறும் அண்ணா, கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார். அதற்கான அழைப்பிதழையும் வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT