Published : 10 Dec 2018 08:44 AM
Last Updated : 10 Dec 2018 08:44 AM
உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த வன்முறை தொடர்பாக மேலும் ஒரு போலீஸ் அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
புலந்த்ஷெகர் மாவட்டம் சிங்ராவதி கிராம வனப்பகுதியில் கடந்த 3-ம் தேதி பசு இறைச்சி கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து, பசு வதைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் காவல் ஆய்வாளர் சுபோத் குமார் சிங் மற்றும் உள்ளூர் இளைஞர் என 2 பேர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து, ராணுவ வீரர் உட்பட 10 பேரை கைது செய்துள்ளனர். இதில் காஷ்மீரில் கைது செய்யப்பட்ட ராணுவ வீரர் ஜீது பாஜி உ.பி. போலீஸாரிடம் நேற்று முன்தினம் இரவு ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, புலந்த்ஷெகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) கிருஷ்ண பகதுர் மற்றும் 2 போலீஸார் நேற்று முன்தினம் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், புலந்த்ஷெகர் மாவட்ட கூடுதல் எஸ்பி (ஊரகம்) ராயஸ் அக்தர் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதில் காஜியாபாத் நவீன கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிவரும் மணிஷ் மிஸ்ரா, புதிய ஏஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை உ.பி. அரசின் முதன்மை செயலாளர் (உள்துறை) அர்விந்த் குமார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT