Published : 06 Dec 2018 06:03 PM
Last Updated : 06 Dec 2018 06:03 PM

மேற்குவங்கத்தில் அமித் ஷா ரத யாத்திரைக்கு அனுமதி மறுப்பு

மேற்குவங்க மாநிலத்தில் பாஜக தலைவர் அமித் ஷா தலைமையில் ரத யாத்திரை நடத்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

மேற்குவங்க மாநிலம் கூச்பிஹாரில் நாளை தொடங்கி டிசம்பர் 14-ம் தேதி வரை பிரச்சார ரத யாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. பாஜக தலைவர் அமித் ஷா பங்கேற்கும் இந்த ரத யாத்திரை நடத்த பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

ஆனால் ரத யாத்திரை நடத்தினால் சமூக அமைதி கெடும் எனக்கூறி மேற்குவங்க அரசு ரத யாத்திரைக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து பாஜக சார்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாஜக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜனநாயக நாட்டில் அனைத்து கட்சிகளும் தங்கள் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி உள்ளது, ஆனால் பாஜகவுக்கு மட்டும் மாநில அரசு தடை விதிக்கிறது என வாதிடப்பட்டது.

இதையடுத்து மேற்குவங்க அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பாஜகவின் ரத யாத்திரையால் சட்டம் - ஒழுங்கு சீர்கெட வாய்ப்பு இருப்பதால் மாநில அரசு தடை விதித்துள்ளது எனக் கூறினார். இதையடுத்து நாளை ரத யாத்திரையை தொடங்க அனுமதி வழங்க முடியாது என கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

வழக்கு விசாரணையை ஜனவரி 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிமன்றம் அதுவரை பாஜக சார்பில் ரத யாத்திரை நடத்தும் திட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என உத்தரவிட்டது. எனினும் மேல்முறையீடு செய்யப்போவதாக பாஜக அறிவித்துள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x